புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் பொதுமக்களுக்கு பாரிய நன்மைகள்

ஜனாதிபதி முதல் சகலரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் -விஜேயதாச ராஜபக்‌ஷ

இலங்கையில் சொத்து விபரங்களை வெளியிடுவது ஒரு சிலருக்கு விலக்களிக்கப்பட்டு வந்தது. எனினும், புதிய சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார். புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து நீதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒன்று. இந்தச் சட்டமூலம் தொடர்பில் (30) கருத்து தெரிவித்துள்ள நீதி அமைச்சர், "புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்துக்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அது வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவடைந்துள்ளது.

எனவே, அந்த ஆணைக்குழுவுக்கு புதிய சட்டத்தின் பிரகாரம் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். கடந்த காலங்களில் சுயாதீனத் தன்மையைக் கருதி ஓய்வுபெற்றவர்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டனர்.

ஆனால், சேவைகள் சிறப்பாக இடம்பெறவில்லை. எனவே, சிறப்பாகச் செயற்படக் கூடியவர்களை நியமிப்பதற்கும் ஏற்பாடுகள் உள்ளன. புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...