புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து
நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, மாணவர் இடைவிலகலை தடுப்பதும் அவர்களை ஊக்குவிப்பதுமே திட்டத்தின் நோக்கம்
மலையக பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (17) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனமான 'Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்குகின்றது.
இதன்படி, மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு 1,000 மெற்றிக்தொன் அரிசி வழங்கப்படவுள்ளது. புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினூடாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இரு தரப்புக்குமிடையிலான உடன்படிக்கையே இவ்வாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் இடைவிலகலை தடுப்பதற்காகவும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பமாகின்றது.
அதேவேளை, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில், இலவச சத்துணவு வேலைத்திட்டமும் சிறார்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கான வேலைத்திட்டத்தையும் உலக வங்கியின் உதவியுடன் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்துள்ளார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ். சமரதிவாகர, அமைச்சு அதிகாரிகள், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனத்தின் ‘Good Neighbors International’ முக்கியஸ்தர்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.
Add new comment