முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டறிதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி வரைவின் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் நேற்று (06) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து இதனை கையளித்தார்.
நெருக்கடிக்குப் பின்னரான பிரச்சினைகளைத் தீர்க்க, மக்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் மையப்படுத்திய மூலோபாயத்துடன் எதிர்கால பயணம் தொடர்பான 27 பரிந்துரைகள் இந்த வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் நிறுவனத் திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான இந்தப் பரிந்துரைகளின் சுருக்கமானது, இறுதி அறிக்கை வெளியிடப்படும் போது இலங்கையின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுதலை முற்றாக இல்லாமல் செய்யும் கொள்கையை அறிவிப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் தவறுகளை இடம்பெறாமல் இருப்பதற்கான உத்தரவாதம் பெறப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Add new comment