- பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கம்
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு வௌிநாடு செல்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களின் உண்மைத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் முறைப்பாடு தொடர்பில் கடந்த நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 21 - 23 ஆம் திகதி வரையும் பின்னர் 28 ஆம் திகதியிலிருந்து இரு நாட்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், தமது கட்சிக்காரரின் வௌிநாட்டு பயணத்தடையை தளர்த்துமாறு டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை 5 நாட்களுக்கு நீக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.
ஐ.ம.ச. கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டயனா கமகே, ஆளும் கட்சிக்கு ஆதரவளித்ததன் மூலம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதோடு, தற்போது சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment