வசந்த முதலிகேவிற்கு ஜனவரி 17 வரை விளக்கமறியல் நீடிப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கும் உத்தரவை, நீதவான் வழங்கியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு நேற்றையதினம் (12) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வசந்த முதலிகே கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,  சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை, அவருக்கு இன்று (13) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

குறித்த பிணை தொடர்பான கோரிக்கை கடந்த அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபரின் முடிவை அறிவிக்கும் வரை நேற்று வரை (12) விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பு, யூனியன் பிளேஸில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த, அரசாங்கத்திற்கு எதிரான கண்டன பேரணியைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்பட்டதோடு, பின்னர் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில்,  சிறிதம்ம தேரர் கடந்த டிசம்பர் 06ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...