- கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைய நடவடிக்கை
- டிசம்பர் 12 - 18 வரை மூடப்பட்டிருக்கும்
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து ஆடு, மாடு அறுக்கும் தொழுவங்கள் மற்றும் மற்றும் இறைச்சிக் கடைகளை (கோழிக் கடைகள் தவிர) இன்று (12) முதல் ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை குறிப்பிட்டு இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு அவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் இன்றையதினம் (12) மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் குளிர் காலநிலை காரணமாக பல இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமை தொடர்பில் பல செய்திகள் வெளியாகி இருந்தன.இதனை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏலவே வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிய இரசாயன பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் மாட்டிறைச்சி ஆட்டிறைச்சியைக் கொண்டு செல்ல உடனடித்தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
பாறுக் ஷிஹான்
Add new comment