- அடுத்தவருட இறுதியாகும் போது பணவீக்கத்தை 4 -5 % க்கு குறைவாக பேணமுடியும்
- வங்கிகள் ஊடாக டொலரை மற்றும் போது அசௌகரியத்திற்கு வாய்ப்பில்லை
கடந்த காலங்களின் மிதக்கும் வட்டி வீதத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கு அறவிடப்படும் வட்டி வீதத்தை அதிகரித்ததனால் அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்றுக் (16) கூடிய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினவிய போதே மத்திய வங்கி ஆளுநர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.
இவ்வாறு வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் ஒரு சில கடன் பெறுநர்களின் முழு சம்பளத்தையும் கடன் தவணைகளுக்கு செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி குறிப்பிட்ட சலுகைக் காலத்துக்கு உரிய வட்டியை மாத்திரம் செலுத்த முடியும் என இதன்போது மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார். அது தொடர்பில் வங்கிகளுக்கு இதுவரை ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
அதேபோன்று, இதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் 70% ஆகக் காணப்பட்ட சாதாரண பணவீக்கம் தற்பொழுது 66% ஆக குறைந்துள்ளதாகவும், 95% ஆகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம் 85% ஆகக் குறைந்துள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார். அதற்கமைய, தற்பொழுதுள்ள நிதிக் கொள்கைகளுக்கு அமைய இந்த மதிப்பீடுகளை அடுத்த ஆண்டு இறுதியாகும் போது 4 - 5 % அளவில் பேணமுடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். அதேபோன்று, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமொன்றாக மாற்றுவதற்கு புதிய சட்டமொன்றை தற்பொழுது வரைபு செய்து தேவையான நாவடிக்கைகளை மேற்கொள்வதாவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
அதேபோன்று, வங்கிகள் ஊடாக டொலர்களை ரூபாய்க்கு மாற்றும் போது ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மத்திய வங்கி ஆளுநரிடம் வினவியதுடன் அவ்வாறு தாமதமடைவதற்கு காரணமான எந்த அறிவுறுத்தல்களையும் மத்திய வங்கி வழங்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.இது தொடர்பில் கண்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
அரச தொழில்முயற்சிகள் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைய 126 நிறுவனங்களில் 22 நிறுவனங்கள் 5 வருடங்களுக்கு அதிகமாக வருடாந்த அறிக்கைகளை சமர்பித்தில்லை என்றும், ஒரு சில வருடாந்த அறிக்கைகள் 7 வருடங்களாக தாமதமாகும் நிறுவனங்களும் காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அதற்கமைய எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனும் செயற்படுவதால், உரிய காலத்தில் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பது தொடர்பில் நிறுவனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குழுவின் உறுப்பினர்களான ஜகத் குமார சுமித்ராறச்சி, சஹன் பிரதீப் விதான உள்ளிட்டோரும், நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Add new comment