உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகளுக்கு மகப்பேற்று கொடுப்பனவு 30 இலிருந்து 84 நாட்களாக அதிகரிப்பு

- இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 11 முடிவுகள்

இலங்கை உப அஞ்சல் நிலையப் பொறுப்பதிகாரிகள் சேவை யாப்புக்கு அமைய உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரியால் தமது மகப்பேற்றின் போது தமது செலவில் பதில் பணிகளுக்கு ஒருவரை கடமையில் ஈடுபடுத்துவதற்காக தாபனக்கோவையின் ஏற்பாடுகளின் பிரகாரம் மகப்பேற்று விடுமுறை பெற்றுக்கொள்வதற்கான உரித்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் பதிலீட்டுக் கொடுப்பனவாக 30 நாட்களுக்கு சமமான கொடுப்பனவு வழங்கப்படும்.

குறித்த மகப்பேற்று விடுமுறைக் காலத்தில் பதில் கடமைக்கு ஒருவரை ஈடுபடுத்த வேண்டியமையால், பெரும்பாலான உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகள் தமது மகப்பேற்று விடுமுறையை 30 நாட்களுக்கு மட்டுப்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார தாபனம் மற்றும் ஏனைய மருத்துவ பரிந்துரைகளுக்கமைய குழந்தை பிறந்து குறைந்தது 06 மாதங்களுக்கு தாய்ப்பாலூட்டல் அவசியமாகும்.

அதற்கமைய, உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகளுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 30 நாட்களுக்கான கொடுப்பனவை 84 நாட்களுக்கு செலுத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் 11 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த தீர்மானங்கள் வருமாறு...

2. காலி – தெனியாய – மாதம்பே வீதியின் சூரியகந்த – ரக்வான (A 017) வரையான வீதியை புனரமைத்தல் கருத்திட்டம்
காலி – தெனியாய – மாதம்பே வீதியின் சூரியகந்த – ரக்வான (A 017) வரையான வீதியை புனரமைப்பதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்துடன் கடன் ஒப்பந்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் புனரமைப்பு நடவடிக்கைகள் 02 ஒப்பந்த தொகுதிகள்  அமைச்சின் பெறுகைக் குழுவின் அதிகார வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவதுடன், எஞ்சிய ஒப்பந்த தொகுதிகள் அமைச்சரவையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.

அதற்கமைய, அமைச்சரவை அதிகார வரையறையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த தொகுதி அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, மட்டுப்படுத்தப்பட்ட கே.டீ.ஏ. வீரசிங்க தனியார் கம்பனிக்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. வாடிவீடுகள் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித்துண்டொன்று நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்கல்
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான இல. 09 காரைத்தீவு வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள காணி, வாடிவீடுகள் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 30 வருட குத்தகையின் அடிப்படையில் கிரான்ட் மவுன்டன் ஹோட்டல் கம்பனிக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏற்புடைய நிபந்தனைகளுக்கமைய குறித்த காணியை கிரான்ட் மவுன்டன் (தனியார்) கம்பனிக்கு வாடிவீடுகள் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முப்பது (30) வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   

4. 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்தல்
திறந்த கணக்கு அடிப்படையில் கொடுப்பனவு முறைமையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான 2002 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களால் எமது நாட்டுக்கு பண அனுப்பலை ஊக்குவிக்கும் நோக்கில் 2002 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பால்மா மற்றும் சிவப்பு பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கோழி உணவு உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்கள் திறந்த கணக்கு/ சரக்குக் கணக்கு அடிப்படையில் கொடுப்பனவு முறைமையின் கீழ் இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவதற்கான விதிக்கப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்,  2022.09.16 ஆம் திகதிய 2297/79 ஆம் இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை ஊக்குவிக்கும் முறையாக அவர்களுக்கு முழுமையான இலத்திரனியல் மோட்டார் வாகன இறக்குமதி செய்வதற்கு இயலுமாகுமாறு விதிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகளுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள், 2022.09.23 ஆம் திகதிய 2298/55 ஆம் இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, மேற்குறிப்பிட்ட இறக்குமதிக் (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. குடியியல் வழக்கு சட்டக்கோவை திருத்தம் (101 ஆம் அத்தியாயம்) (205 ஆம் உறுப்புரை)
வழக்கொன்றின் தரப்பினர்களுக்கு வழக்குத் தீர்ப்பின் அல்லது வழங்கப்பட்ட தீர்ப்புக் கூற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியை வழங்குவதற்கு ஏற்புடைய வகையில் குடியியல் வழக்கு சட்டக்கோவையின் (101 ஆம் சட்டவாக்கம்) (205 ஆம் உப பிரிவு) திருத்தம் செய்வதற்காக சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.01.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்பதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. புராதன சட்டபூர்வ சுவடிகள் காப்பு சட்டத்திற்குப் பதிலாக சட்டபூர்வ சுவடிகள் காப்பு புதிய சட்டத்தை அறிமுகம் செய்தல்
இலங்கையின் எழுத்து வடிவிலான வரலாறு மற்றும் கலாச்சார தனித்துவ அடையாளங்களை எடுத்தியம்பும் பொது அதிகாரசபைகளில் சாட்சிபூர்வமான ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை நேர்த்தியான வகையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் போன்றன தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சட்டபூர்வமான காப்புகளுக்குரிய 1839 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பத்திரிகைக் கட்டளைச் சட்டம் , 1885 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அச்சக மற்றும் வெளியீட்டாளர்களுக்கான கட்டளைச் சட்டம் மற்றும் 1902 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க அச்சக கட்டளைச் சட்டம் போன்ற 03 சட்டங்கள் இத்திணைக்களத்தால் அமுல்படுத்தப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த ஆவணங்களின் சட்டபூர்வ பிரதிகள் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. உலகளாவிய ரீதியில் 131 நாடுகளுக்கிடையே புராதன சட்டபூர்வ காப்புச் சட்டம் இலங்கையில் காணப்படுவதுடன், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2018 ஆம் ஆண்டில் குறித்த விடயஞ்சார் நிபுணத்துவக் குழுவால் ஏற்புடைய தரப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டபூர்வ காப்புக்கள் சட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 80 டொன் கொள்ளவு கொண்ட Bollard Pull Twin Azimuth Stern Drive Harbour  வகையைச் சேர்ந்த இழுவைக் கப்பல் கொள்வனவு
கொழும்பு துறைமுகத்தில் தற்போது சிறந்த நிலையில் தொழிற்படும் 07 இழுவைக் கப்பல்கள் இருப்பதுடன், எதிர்காலத் தொழிற்பாடுகளுக்காக 80 டொன் கொள்ளளவு கொண்ட மேலுமொரு இழுவைக் கப்பல் கொள்வனவு செய்யப்பட வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் செயன்முறையைக் கடைப்பிடித்து இழுவைக் கப்பலை கொள்வனவு செய்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு விமான சேவைகள் பணிக்குழாம் சேவைகள் திட்டமிடல் மற்றும் வளங்கள் முகாமைத்துவ தன்னியக்க தொகுதியொன்றை (Automated Crew Scheduling and Resources Management System) பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கல்
உலகளாவிய ரீதியில் வர்த்தக விமான சேவைகள் மூலம் விமான சேவைகள் பணிக்குழாம் சேவைகள் திட்டமிடல் மற்றும் வளங்கள் முகாமைத்துவ தன்னியக்கதொகுதி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியிடம் தற்போதுள்ள தொகுதியின் ஒப்பந்த காலம் 2022.10.31 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது. அதனால், பொருத்தமான சேவை வழங்கும் நிறுவன பெறுகை கோரலுக்காக சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் பொறிமுறை கையாளப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகையை 05 வருட காலத்திற்கு CAE Flight Services USA, Inc கம்பனிக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. கொரிய அரசின் உதவியுடன் குளியாப்பிட்டி நாரங்கல்ல இல் நிறுவப்பட்டுள்ள தொழிநுட்பவியல் பாடவிதானத்திற்கான தேசிய கல்வியியல் கல்லூரியின் கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் வழங்கல்
தொழிநுட்பவியல் பாடவிதானத்திற்கு தேசிய கல்வியியல் கல்லூரி கொரிய அரசின் உதவி மற்றும் உள்ளூர் நிதியத்தின் கீழ் குளியாப்பிட்டி நாரங்கல்ல பிரதேசத்தில் அமைப்பதற்கு 2017.01.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், பல்வேறு காரணங்களால் 2021 நவம்பர் மாத இறுதிவரை கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் தொடர்பான முகவர் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்த கட்டுமானங்களை ஆரம்பிக்க முடியாது போயுள்ளது.

குறித்த கட்டுமானப் பணிகளை நேரடி ஒப்பந்தமாக பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகத்திற்கு ஒப்படைப்பதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் தொடர்பான முகவர் நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தை பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகத்திற்கு ஒப்படைப்பதற்காக கல்வி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்ட பிராந்திய கைத்தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக காணித்துண்டுகளை ஒதுக்கி வழங்கல்
1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்படுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தாபிக்கப்பட்டுள்ள பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழு மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய பிராந்திய கைத்தொழில் அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்ட முதலீட்டாளர்கள் 16 பேருக்கு 35 வருட நீண்டகால குத்தகையின் அடிப்படையில் 16 காணித்துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. காணாமல் போனவர்களின் குடும்பங்களின் மேம்பாட்டுக்காக ஒரு தடவை பணம் செலுத்தல்
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் தலைமையதிபதியால் வழங்கப்படும் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன ஆளொருவரின் நெருங்கிய உறவினருக்கு 100,000 ரூபா தொகையை செலுத்துவதற்காக 2022.03.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் காணாமல் போனமைக்கான சான்றிதழை (Certificate of Absence) பெற்றுக் கொள்வதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமை, செலுத்தப்படுகின்ற 100,000 ரூபா தொகை போதுமானதாக இன்மை போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு, குறித்த ஆளொருவர் காணாமல் போயுள்ளமையை இழப்பீட்டு அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் காணாமல் போனமைக்கான சான்றிதழைப் (Certificate of Absence) பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையை நீக்குவதற்கும், செலுத்தப்படுகின்ற தொகையை 200,000 ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  


Add new comment

Or log in with...