பாடசாலை மதிய போசன திட்டத்தில் மேலும் 1 மில்லியன் மாணவர்கள் இணைப்பு

- இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முடிவுகள்

அரசாங்கம் வருடாந்தம் 4 பில்லியன் ரூபாய்கள் செலவிட்டு 7,926 பாடசாலைகளில் 1.08 மில்லியன் மாணவர்களை இலக்குவைத்து பாடசாலை மதிய உணவு வேலைத்திட்டத்தை  நடைமுறைப்படுத்தி வருகின்றது.

வறுமையொழிப்பு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் 'உணவுப் பற்றாக்குறையால் எந்தவொரு பிரஜையும் பட்டினியால் இருத்தல் ஆகாது' எனும் நோக்கத்தை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது.

அதன் கீழ் வறுமை மற்றும் போசாக்கு தொடர்பாக மாவட்ட மட்டத்தில் காணப்படுகின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தேவையான நிதியை வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் பெற்றுக்கொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாடசாலை மதிய போசன வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்து மேலும் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போசாக்கான மதிய போசன வேளையை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. ‘உணவுக் கொள்கைக் குழுவை” நிறுவுதல்
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்தல் போன்ற தீர்மானங்களை எட்டுப்போது கிராமிய மட்டத்திலிருந்து மேல்மட்டத்தை நோக்கிய மூலோபாயத்தை பின்பற்றி கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்தும் நோக்கில் பல் - துறைசார் பொறிமுறையொன்று அரசாங்கத்தால் அண்மையில் நிறுவப்பட்டது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொறிமுறைக்கு வழிகாட்டல் மற்றும் கண்காணித்தல், அத்துடன் பல்வேறு நிர்வாக மட்டங்களில் சமூகத்தில் அதிக இடருக்கு உள்ளாகக் கூடியவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இயலுமை குறித்த பொறிமுறை மூலம் உறுதிப்படுத்தப்படும்.

இப்பொறிமுறையை முறைசார்ந்த வகையிலும் வினைத்திறனாகவும் நடைமுறைப்படுத்துவதற்காக விநியோகம், விலை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான குறுகியகால பிரச்சினைகள் உள்ளிட்ட நாட்டில் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகள் தொடர்பாக உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் குறித்த நிறுவனங்களின் தலைமையில் ஏற்புடைய நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் “உணவுக் கொள்கைக் குழுவை” நிறுவுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்தம் செய்தல்
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளவாறு, அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது 60 ஆக திருத்தப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, 2023.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதற்கான ஒழுங்குவிதிகளை விதித்து ஏற்புடைய சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தெசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. 2022/23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒ/ப் பொடாஸ்; (MOP) உரக் கொள்வனவுக்கான பெறுகை
ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்டுள்ள 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்தி 40,000 மெட்ரிக்தொன் 2022/23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒ/ப் பொடாஸ்; (MOP) உரக் கொள்வனவுக்கான பெறுகைக் கோரலுக்கு 2022.06.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முறையான பெறுகைக் கோரல் செயன்முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தத்தை Ameropa Asia Pte, Ltd கம்பனிக்கு வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தம் செய்தல்
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 47 மற்றும் 57 ஆம் உறுப்புரைகள் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆவது உறுப்புரையைத் திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 153 ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளால் பொருட்களை அரசவுடமையாக்கல் மற்றும் அபராதம் விதித்தல் போன்றவற்றால் அரசுக்கு கிடைக்கின்ற வருமானம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் குறித்த உறுப்புரையை திருத்தம் செய்வதன் அவசியத்தை அராசாங்க கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் படிமுறையாக சுங்க நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்தல் மற்றும் குறித்த விசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்கான கால வரையறையை சட்டரீதியாகக் குறித்தொதுக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தி மேலும் சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2023 நிதியாண்டுக்கான  ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2022.08.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒவ்வொரு செலவுத் தலைப்புக்களுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள 2023 ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமைச்சரவையால் ஆராயப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான மொத்த மீண்டெழும் செலவாக 4,634 பில்லியன் ரூபாய்களும், மொத்த மூலதனச் செலவாக 3,245 பில்லியன்களும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தெசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


Add new comment

Or log in with...