அரச ஊழியர்களது சம்பள குறைப்பு செய்தி பொய்யானது

அரசாங்க ஊழியர்களின் அடுத்த மாத சம்பளத்தில் எந்த வித குறைபாடுகளும் இருக்காது என்றும், அதனை குறைப்பதற்கான எந்த ஒரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிம்பலா பிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் அடுத்த மாத சம்பளம் குறைக்கப்பட உள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் மற்றும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என தெரிவித்துள்ள அவர் அத்தகைய கூற்றை முற்றாக மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களை தூண்டிவிடும் வகையில்

சில தரப்பினர் இதுபோன்ற திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறான ஒரு தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் தொழில் உரிமையை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ள அவர் மக்களைத் தூண்டிவிடும் வகையில் மேற்கொள்ளப்படும் அத்தகைய பிரசாரங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன,அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அரை மாத சம்பளமே வழங்கப்படும் என சில சமூக வலைத்தளங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...