- இன்று சபாநாயகரால் விடுக்கப்பட்ட அறிவிப்புகள்
- தேசிய சபை தொடர்பான யோசனை கிடைக்கவில்லை என சபாநாயகர் தெரிவிப்பு
- பாராளுமன்றம் செப்டெம்பர் 20 வரை ஒத்திவைப்பு
இன்று (09) பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு கூடியதோடு, பாராளுமன்ற நடவடிக்கைகள் 24 நிமிடங்களே இடம்பெற்றது.
இவ்வேளையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உள்ளடங்கலாக 10 இற்கும் குறைவானோரே சமூகமளித்திருந்தனர்.
அத்துடன் எதிர்க்கட்சி சார்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, ஹேஷா விதானகே ஆகிய இருவர் மாத்திரமே வருகை தந்திருந்ததை காணக் கூடியதாக இருந்தது.
ஆளும் கட்சி சார்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட மேலும் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கை பாராளுமன்றம் சார்பாக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து சோகத்தை வெளியிடுவதற்காக 2 நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய சபை தொடர்பில் பிரதமர் தினேஷ்
தேசிய சபையை நிறுவுவது தொடர்பான அறிவிப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்ததோடு, அதனை அவை அனுமதிக்குமானால், தேசிய சபையை ஏற்படுத்த முடியுமென தெரிவித்தார்.
ஆயினும் அது இன்னும் கிடைக்கப் பெறவில்லையென சபாநாயகர் தெரிவித்தார்.
அமரகீர்த்தி அத்துகோரளவின் அனுதாபப் பிரேரணை
இன்றையதினம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற அமரகீர்த்தி அத்துகோரள தொடர்பான ஒத்தி வைக்கப்பட்ட அனுதாபப் பிரேரணையின் தொடர்ச்சி மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 4.30 மணி வரை இடம்பெறவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து குறித்த ஒத்திவைப்பு வேளை அனுதாபப் பிரேரணையை மற்றுமொரு தினத்திற்கு ஒத்திவைத்து பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் யோசனையை முன்வைத்தார்.
அதனை ஏற்ற சபாநாயகர், சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்தவின் யோசனைக்கு அமைய, செப்டெம்பர் 20ஆம் திகதி மு.ப. 9.30 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
சபாநாயகரின் இன்றைய அறிவிப்புகள்
இன்றைய பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரம்
Add new comment