கதிர்காமத்திலுள்ள ஏழு மலைகளில் வியப்பில் ஆழ்த்தும் விபூதிமலை!

ஏழுமலையான் கதிர்காமக் கந்தன் ஆலயம் என்றால் அனைவருக்கும் கதிரைமலை ஞாபகத்துக்கு வரும். இந்த கதிரைமலையை ஏழுமலை என்றும் அழைப்பர்.

உண்மையில் அங்கு ஏழு மலைகள் உள்ளன. கதிர்காமத்தைச் சுற்றியுள்ள ஏழு மலைகளும் ஏழு வகையான மகத்துவம் வாய்ந்தவை. அதில் கதிரமலைக்கு மட்டுமே எல்லோரும் செல்வதற்கு அனுமதி உண்டு.

அது தவிர வள்ளிமலை, தெய்வானைமலை, இடும்பன்மலை, நாகமலை, பச்சைமலை, கழுகுமலை மற்றும் விபூதிமலை ஆகிய மலைகளுடன் சேர்ந்து ஏழுமலைகளின் அதிசய சக்தி கதிர்காமம் மண்ணை காலம் காலமாக இயக்குகிறது.

இந்த ஏழுமலைகளில் விபூதிமலை பற்றி இம்முறை அறியக் கூடியதாக இருந்தது. இது மிகவும் சிறப்பான தன்மை வாய்ந்தது.

கதிர்காமத்தில் இருந்து கித்துளபவ வழியாக சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இவ்விபூதிமலை அமைந்துள்ளது.

விபூதிமலையில் ஆடி மாதத்தில் திருவிழா காலங்களில் மட்டும் இயற்கையாக உற்பத்தியாகும் விபூதியே இங்கு பிரசாதமாக இன்றுவரை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட வம்சத்தினரே இன்றுவரை இங்கு திருநீறு எடுக்கின்றனர்.

இவ்விபூதிமலைக்கு சித்தர்கள் குரல் அன்பர்கள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ தலைமையில் சென்று பூஜை செய்து முறையாக விபூதி எடுத்த அற்புதமான நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இது தொடர்பாக காலாகாலமாக விபூதி எடுத்து விநியோகம் செய்து வரும் அங்குள்ள ரவீந்திரன் என்ற இளைஞரை பேட்டி கண்ட போது, அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

"நாங்கள் பிறந்த நாளிலிருந்து இந்தத் தொழிலைத்தான் செய்து வருகின்றோம். இந்த விபூதிமலையானது கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் திருவிழாக் காலத்தில் அதாவது 15 நாட்களில் மாத்திரம்தான் இப்படியாக மணல் போன்று விபூதியாக வரும். ஏனைய நாட்களில் வெள்ளை நிறப் பாறையாகவே இருக்கும். உடைக்கவும் முடியாது .எடுக்கவும் முடியாது. இது கந்தன் அருளாகத்தான் இருக்கும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...