உயர் தரப் பரீட்சைக்கு தோற்ற 80% வரவு அவசியமில்லை

- கல்வி அமைச்சு அறிவிப்பு

2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% வருகையை கவனத்திலெடுக்க அவசியமில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்கள், அவர்கள் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது 80% பாடசாலை வரவு இருப்பது அவசியமென்பது ஒரு நிபந்தனையாக, கல்வி அமைச்சு ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

ஆயினும் நாட்டில் கடந்த காலங்களில் நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலை, போக்குவரத்து சிரமம், எரிபொருள் நெருக்கடி காரணமாக குறித்த நிபந்தனையை தளர்த்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, 2020 ஜூலை மாதம் உயர்தரத்தில் இணைந்த மாணவர்கள், எதிர்வரும் 2022 நவம்பர்/ டிசம்பரில் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில், அவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, அவர்களது 80% பாடசாலை வருகையை கருத்தில் கொள்ள வேண்டாமென அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் நடாத்த திட்டமிட்டிருந்த போதிலும் அதனை மேலும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்து நவம்பரில் நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நடைபெற்று முடிந்த 2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 இல் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை இவ்வருடம் பெப்ரவரி 07ஆம் திகதி ஆரம்பமாகியது.

இப்பரீட்சைகள் 2,437 நிலையங்களில் இடம்பெற்றதோடு, 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும், 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளிட்ட 345,242 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...