வரவுசெலவுத் திட்ட குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் ஓகஸ்ட் 30 - செப்டெம்பர் 02 வரை

- எதிர்வரும் 4 மாதங்களுக்கான அரச செலவினத்துக்கு ரூ. 327,587 கோடியே 65 இலட்சத்து 58,000 ரூபா (ரூ. 3,275,876,558,000)

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் செலவினங்களுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட குறைநிரப்பு பிரேரணை சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 30, 31 மற்றும் செப்டெம்பர் 01, 02 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் கூடிய போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செலவினத்துக்காக 3,27,587 கோடியே 65 இலட்சத்து 58,000 ரூபாவுக்கான (ரூ. 3,275,876,558,000) குறை நிரப்பு பிரேரணை அரசாங்கத்தினால் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு (2022) தொடர்பான 2021 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, மொத்தச் செலவு இருநூற்று எழுபத்தொன்பதாயிரத்து அறுநூற்று நாற்பத்து நான்கு கோடி அறுபத்தைந்து இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரம் (ரூபாய் 2,796,446,558,058,058) என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்குமென அதன் மூலம் 48,913 கோடியே 38 இலட்சத்து 91,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட விசேட செலவினங்களுக்காக 1,34கோடியே 51 இலட்சத்து 1,000 ரூபாவும் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்காக 46,720 கோடியே 88 இலட்சத்து 33,000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்காக 37,632 கோடியே 56 இலட்சத்து 31,000 ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 11,280 கோடியே 82 இலட்சத்து 60,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதைவேளை, சுகாதார அமைச்சுக்கு 24,806 கோடியே 99 இலட்சத்து 98,000 ரூபாவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் அமைச்சுக்கு 30,710 கோடியே 84 இலட்சம் ரூபாவும் விவசாய அபிவிருத்தி அமைச்சுக்காக 13,856 கோடியே 4,85,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின்சக்தி,எரிசக்தி அமைச்சுக்கு 26,979 கோடியே 57 இலட்சத்து 50,000 ரூபாவும் கல்வி அமைச்சுக்காக 20,000 கோடி ரூபாவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சுக்காக 7,346 கோடியே 74 இலட்சம் ரூபாவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்காக 1,592 கோடியே 20 இலட்சம் ரூபாவும் மீதமான நிதி ஏனைய அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...