முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடை ஓகஸ்ட் 04ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளாக குறித்த இருவரும் உள்ளடங்குவதால் உயர் நீதிமன்றத்தினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்டோரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனு இன்று (01) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மனு கடந்த ஜூலை 27ஆம் திகதி வரை எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நாளை (02) வரை குறித்த பயணத்தடை உத்தரவு நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment