- சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த நியமனம்
- ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக மீண்டும் பிரசன்ன
இன்றையதினம் (27) ஐ.தே.க. உறுப்பினர் வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்றத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான, ஐ.தே.க. தேசியப்பட்டியல் பாராளுமன்ற ஆசனத்திற்கே அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று (27) பாராளுமன்றம் மு.ப. 10.00 மணிக்கு கூடிய போது முதல் நடவடிக்கையாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, வெளியிடப்பட்ட சபாநாயகரினால் விடுத்த அறிவித்தலுக்கு அமைய,
பாராளுமன்ற சபை முதல்வரராக கலாநிதி சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
வஜித அபேவர்தன
அவர் 1994ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்தில் முதல் தடைவையாக இலங்கை பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார். அன்றிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை அபேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்திலிருந்து தொடர்ச்சியாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் அவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்.
அத்துடன், அவர் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சராகவும், பொது நிர்வாக, முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்கள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் தற்பொழுது செயற்பட்டு வருகிறார்.
1961.09.02ஆம் திகதி பிறந்த வஜிர அபேவர்தன, காலி மஹிந்த வித்தியாலயத்தில் கல்வியைப் பெற்றார். அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வு
இன்றையதினம் (27) பாராளுமன்றத்தில் அவசரகால நிலை தொடர்பான விவாதம் இடம்பெற்று அது வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
கடந்த ஜூலை 18 முதல் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment