- புதன்கிழமை வரை அவகாசம் உள்ளது
நீண்ட காலத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்க விரும்பாத 2 எம்.பி.க்களை அப்பதவிகளில் நியமிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இணங்கினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகத் தயார் என மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு, நீண்ட காலத்திற்கு அப்பதவிகளை வகிக்க விரும்பாத 2 எம்.பி.க்களை நியமித்தல் மற்றும் குறுகிய காலத்தில் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான குறுகிய கால செயல்திட்டத்திற்கு உடன்பட்டு கூடிய விரைவில் புதிய தேர்தலுக்கு செல்ல இணங்குதல் ஆகிய இரு நிபந்தனைகளையும் ஏற்றால், அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்க தாங்களும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்கள பிரதிநிதிகள் குழுவினர்களை, நேற்று (17) கட்சித் தலைமையகத்தில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை வாபஸ் பெறத் தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், இந்நிபந்தனைகளை ஏற்க புதன்கிழமை (20) வரை அவகாசம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
Add new comment