3 ஆண்டுகளின் பின் யாழ். நல்லைக் கந்தன் மஹோற்சவம்

- இம்முறை சிறப்பாக நடத்த ஏற்பாடு

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை மூன்று வருடங்களின் பின்னர் இம்முறை மிகச் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டளவில் நடைபெற்ற நல்லூர் ஆலய மஹோற்சவம் 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு நடந்தப்பட்டதோ அதேபோன்று இம்முறையும் நடைபெறுமென யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஒகஸ்ட் 01ஆம் திகதி காலையிலிருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஒகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

அதேபோன்று வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்துக்குள் பிரவேசிக்க முடியாது. ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும். இம்முறை திருவிழாவின் போது ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். இவை தவிர எதிர்வரும் காலங்களில் தேவைப்படும்போது கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றார். இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், மாநகர பிரதிமுதல்வர், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ். விசேட நிருபர்


Add new comment

Or log in with...