மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானத்துக்கு எதிராக முஷாரப் MP வழக்குத் தாக்கல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். எம். முஷாரப் தன்னை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கியமை நீதிக்கு முரணானது என்ற அடிப்படையில் அக்கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக நேற்று முன்தினம் (27) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் அவருக்கு எதிராக நடாத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் கட்சியின் யாப்புக்கு எதிராகவும் அதன் தீர்மானங்களுக்கு எதிராகவும் முஷாரப் எம்பி செயற்பட்டார் என்று தெரிவித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

மக்கள் காங்கிரஸ் கட்சியானது முஷாரப் எம்பியை கட்சியிலிருந்து நீக்கியமை தொடர்பாக இம் மாதம் முதலாம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்த திகதியிலிருந்து ஒருமாத காலத்தினுள் அந்நீக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யக் கூடிய உரிமை பாராளுமன்ற உறுப்பினருக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. கட்சி உறுப்புரிமை நீக்கம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமை நீதிக்கு முரணானது என்ற அடிப்படையில் தனது மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...