சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் கட்டட தொகுதிகளுக்கு சூரிய ஒளியை பயன்படுத்தி 50மெகாவோற் மின்சார திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேற்படி திட்டம் குறித்து அறிமுகம் செய்யும் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் (22) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள் உட்பட அரச நிறுவனங்களின கூரைகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறுவதற்கான கருவிகளை பொருத்தி 50மெகா வோற்றுடன் கூடிய மின் இணைப்பை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்தப்படவுள்ள சூரிய ஒளி மின் இணைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கலந்துரையாடலில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண பிரதான செயலாளர் சுசில் ஜயலத், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Add new comment