எரிபொருளுக்காக காத்திருந்த மோட்டார் சைக்கிள்களை மோதிய பஸ்

- 5 பேர் காயம்; பஸ்ஸின் சாரதி தப்பியோட்டம்

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் ஊரணி பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வரிசையில் காத்திருந்த சிலர் மீது வாகனமொன்று மோதியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று (27) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு மோதியுள்ளது.

தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுகின்றவர்களை  செங்கலடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதியை நோக்கி ஏற்றிச்சென்ற தனியார் பஸ்வண்டி வீதி ஓரத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நேற்று மாலையிலிருந்து வரிசையில் காத்திருந்த இந்நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை தொடர்ந்து குறித்த பஸ்ஸின் சாரதி பயத்தின் காரணமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து  பஸ் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...