தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

தொழிலதிபர் தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

பசில் ராஜபக்‌ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் அக்கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (22) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியபோது, அவை நடவடிக்கைகளின் பிரதான விடயங்களுக்கு அமைய, தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை, அவர் தனது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரத்தையும் பாராளுமன்றத்தில் கையளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பசில் ராஜபக்‌ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தொழிலதிபர் தம்மிக பெரேரா நியமிக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நேற்றையதினம் (21) உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1967 டிசம்பர் 28ஆம் திகதி களுத்துறை கட்டுக்குறுத்தை பிரதேசத்தில் பிறந்த தம்மிக்க பெரேரா, ஹொரணை தக்ஸிலா வித்தியாலையத்தின் பழைய மாணவராவார். அத்துடன் இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமாதாரி (NDT) ஆவார்.


Add new comment

Or log in with...