தம்மிக பெரேரா தேசியப் பட்டியல் எம்.பியாவதற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

- நாளை பதவிப்பிரமாணம் செய்யலாம் என எதிர்பார்ப்பு

பசில் ராஜபக்‌ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தொழிலதிபர் தம்மிக பெரேரா நியமிக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே  நிராகரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றையதினம் (21) குறித்த மனுக்கள் தொடர்பான பரிசீலனை இரண்டாவது நாளாக மேன்முறையீட்டு நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அனில் ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுக்களின் பரிசீலனைகளின் நிறைவில், தங்களது தீர்மானத்தை அறிவித்த நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் பெரும்பான்மை முடிவின் அடிப்படையில், குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுப்பதற்கு அனுமதி வழங்குவதிலிருந்து நிராகரிப்பதாக அறிவித்தார்.

இதேவேளை, நேற்றையதினம் குறித்த மனுக்களின் பரிசீலனையின் போது, தீர்ப்பு வரும் வரை தாம் பதவிப்பிரமாணம் செய்யப்போவதில்லையென அவர் நீதிமன்றில் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, தற்போது குறித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் நாளையதினம் (22) பாராளுமன்றத்தில் அவர் எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அத்துடன், அண்மையில் ஜனாதிபதியினால் இரு புதிய அமைச்சுகள் உருவாக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதில் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அவருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து பசில் ராஜபக்‌ஷ தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தாம் பதவி வகித்து வந்த அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளியிலிருந்தும் இராஜினாமா செய்த பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரோ, பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவத்தையும் பெற்றிருந்தார்.

அத்துடன், அவரது பெயரை, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அக்கட்சியினால், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினாலும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடாத நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கும் தேசியப் பட்டியல் பெயர்ப் பட்டியலிலும் பெயர் குறிப்பிடப்படாத அவர், எவ்வகையில் தேசியப் பட்டியல் எம்.பியாக பெயரிடப்பட முடியுமென, குறித்த விடயத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...