சூழலியல் நிலைபேறான தன்மை, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதில் தொடர்ந்தும் உறுதிபூண்டுள்ள DIMO

இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனமான DIMO, கடல் சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது ‘Life Below Water’ (நீருக்கு அடியில் வாழ்க்கை) மற்றும் 'Life on Land' (நிலத்தில் உள்ள உயிர்கள்) ஆகியவற்றில் கவனம் செலுத்தும், ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் (SDGs) ஒன்றிணைந்ததாகும். அனைவருக்கும் சிறந்த மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை அடைவதற்காக, எமது கடல் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைக் கண்டறிந்து, தனது நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிசெய்வதற்காக, ஒரே எண்ணம் கொண்ட நிறுவனங்களுடன் DIMO கூட்டுச் சேர்ந்துள்ளது.

DIMO வின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “சூழல் மற்றும் உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு போன்ற திட்டங்கள் தொடர்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள DIMO, இந்த திட்டங்களில் முன்னணியில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறது. கடல் சூழலைப் பாதுகாப்பதற்கும் எதிர்கால சந்ததியினருக்காக அதனை பேணுவதற்கும் DIMO தொடர்ந்தும் அதன் உறுதிப்பாட்டை வழங்குகிறது. அதே நேரத்தில் தமக்கு அருகிலுள்ள சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறுவனம் ஊக்குவிக்கிறது.

DIMO முதன்முதறையாக 2012 இல் ஆமை காப்பு நடவடிக்கை தொடர்பில் தனது கவனத்தை செலுத்தி ‘பாணமை திட்டத்துடன்’ இணைந்ததன் மூலம் இத்தகைய கடல் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் களமிறங்கியது. கடலாமைகள், உலக அளவில் கடல் சூழல் தொகுதியில் முக்கிய பங்கு வகிக்கின்ற அதே வேளையில், சட்டவிரோத வர்த்தகம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல அச்சுறுத்தல்களை அவை எதிர்கொள்கின்றன. அழிந்து வரும் இந்த உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அவை அழியும் அபாயத்தை அடையும்.

குறிப்பாக, அழிவடையும் நிலையில் உள்ள Olive Ridley (90%), பச்சை ஆமை (5%) மற்றும் Loggerhead (5%) ஆமைகளின் பிரபல்யமமான வாழ்விடங்களாக, பாணமையிலிருந்து உகந்தை வரையிலான பகுதிகள் காணப்படுகின்றன. வனஜீவராசிகள் மற்றும் கடல் வள பாதுகாப்பு (Wildlife & Ocean Resource Conservation - WORC) நிறுவனத்துடன் இணைந்து, அவசியமான நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு திட்டங்களை DIMO மேற்கொண்டுள்ளது. அத்துடன் நிறுவனம் 150,000 இற்கும் அதிக ஆமைக் குஞ்சுகளை விடுவித்துள்ளது. இயற்கையாக வேட்டையாடப்படும் நிலைமைகளிலிருந்து முட்டைகளைப் பாதுகாப்பதற்காக, ஆமை கூடுகளின் மேல் கூண்டுகள் அமைத்து பாதுகாப்பளித்தது. இக்கூண்டுகளின் இடைவெளி மூலம் ஆமை குஞ்சுகள் வெளியே வரக்கூடிய வகையில் இக்கூண்டுகளை நிர்மாணிப்பதற்கு DIMO திட்டம் வகுத்திருந்தது. அது மாத்திரமன்றி, முட்டைகளை கண்காணிப்பதற்காக குறித்த பிரதேசத்திலிருந்து நபர்களை நியமித்து, நிலையான ஊதியமொன்றையும் DIMO வழங்குகிறது. அதன் மூலம் குறித்த சமூகத்தை வலுப்படுத்துவதற்கும், உள்ளூரில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அது தவிர மற்றுமெதரு படி முன்னேறி,ஆமைகளின் கூடுகளைப் பாதுகாப்பதில் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்த பயனுள்ள அறிவும் பிரதேசவாசிகளுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆமை முட்டைகளை சேகரிப்பதைத் தவிர்க்கவும், ஆமை கூடுகளைப் பாதுகாப்பதற்கு உறுதியளிக்கும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவர்களுக்கு உதவியாக அமைந்தன.

DIMO வினால் ஆரம்பிக்கப்பட்ட மற்றுமொரு செல்வாக்கு மிக்க திட்டமான ‘Life to Reef’ (பவள பாறைக்கு வாழ்வு) திட்டம் கடந்த 2017 இல் காலிக்கு அருகிலுள்ள ரூமஸ்ஸலவில் உள்ள போனவிஸ்டா பாறைகளில் (Bonavista Reef) உள்ள அழகான பவளப்பாறைகளை மீளகட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் இதுவரையிலான பயணத்தில், சீமெந்து கட்டமைப்புகள், உலோகச் சட்டங்கள், நாற்றுமேடை அடுக்குகள் ஆகியவற்றில் பவளப்பாறைகளை நிலைநிறுத்துவது உள்ளிட்ட, பல்வேறு பவளப்பாறை மறுசீரமைப்பு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடலின் அடிப்பகுதியில் சுழியோடிகளின் உதவியுடன் இவை நிலைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 5 வருடங்களுக்கு முன்னர் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை மொத்தமாக 3,500 சிறுபவளங்கள் நடப்பட்டுள்ளதோடு, கடலின் அடிவாரத்தில் நாற்றுமேடை தொகுதிகள் மற்றும் உருக்கினாலான இறாக்கை அடுக்குகள் மூலம் 10 பவள திட்டுகள் மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் மூலம் தொடர்ச்சியான பவளப்பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியளிக்கப்படுகின்றன. இந்த மறுசீரமைப்பு நுட்பங்கள் மூலமான திட்டங்கள் மூலம் சுமார் 4 ஏக்கர் பவளப்பாபாறைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. போனவிஸ்டா பவளப் பாறைகள், மிக அதிகளவான உயிரியல் பல்வகைமை கொண்ட பவளப்பாறைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆயினும், 2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட எல்-நினோ விளைவு காரணமாக அதன் 95% பவளப்பாறைகள் அழிவடைந்தன. WORC நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன், இயற்கையாகவே பவள பாறைகளை மீட்கும் நோக்கில் Life to Reef திட்டத்தை DIMO ஆரம்பித்திருந்தது. இந்த மறுசீரமைப்பு செயன்முறை காரணமாக, ரூமஸ்ஸல ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மீண்டும் உருவானதோடு, பிரதேசவாசிகளுக்கு பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளையும் அது உருவாக்கியுள்ளது.

நாட்டின் அழகிய கடற்கரைப் பகுதியைப் பாதுகாப்பதானது, DIMO நிறுவனத்தின் நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலின் கீழ் உள்ள கடல் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும். இது உண்மையில் சுற்றுலாத் துறைக்கு உதவுவதோடு, பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கையாகவும் அமைகிறது. கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA), சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் உயிர்ப்பல்வகைமை திணைக்களம் (BSL) ஆகியவற்றுடன் இணைந்து, திக்ஓவிட்ட பகுதியில் கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கான நிதியை வழங்க DIMO நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த அரச - தனியார் - சமூக கூட்டு முயற்சியின் கீழ், திக்ஓவிட்ட (800 மீற்றர்) மற்றும் திக்ஓவிட்டவிலிருந்து புதிய பாலம் வரை (800 மீற்றர்) ஆகிய 2 கடற்கரைப் பிரதேசங்களுக்கு DIMO நிதியளித்துள்ளது. இவ்வருட இறுதி வரை இடம்பெறும் இத்திட்டம் நிறைவடைந்த பின்னர், அதன் தொடர்ச்சியை முன்னெடுப்பதற்காக, தெரிவு செய்யப்பட்ட குடும்பம் மூலம் ஒவ்வொரு கடற்கரை பிரதேசங்களையும் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், இதற்கான அவர்களின் பங்களிப்புக்கு நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்களை, BSL மற்றும் MEPA ஆகியன வழங்கும். அந்த வகையில், கடற்கரையை சுத்தம் செய்யும் முயற்சிகள் காரணமாக அருகிலுள்ள மக்களுக்கு குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றது. DIMO தனது அனுபவத்தின் மூலம், சிறிய அளவிலான குப்பைகளை கூட மறுசுழற்சி செய்வதால் ஏற்படும் பாரிய நன்மைகள் குறித்து சமூகங்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

அரச மற்றும் தனியார் துறை பங்காளிகளுடன் இணைந்து, எதிர்கால தலைமுறையினருக்கு நிலைபேறான சூழலை உருவாக்குவதற்காகவும், வளங்களை பேணி பாதுகாக்கும் பொருட்டும், சூழல் மற்றும் உயிர்ப்பல்வகைமை பெருக்க முயற்சிகளில் DIMO தொடர்ந்தும் ஈடுபடும் என்பதில் உறுதியாக உள்ளது.


Add new comment

Or log in with...