மன்னார் காற்றாலை மின் திட்டம்: எந்த தரப்பினருக்கும் அழுத்தம் விடுக்கவில்லை

- செயற்றிட்டங்கள் வெளிப்படைத்தன்மையாகவே இடம்பெறுகிறது
- கோப் குழுவில் மின்சார சபை தலைவர் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி மறுப்பு

மன்னாரில் நிர்மாணிக்க திட்டமிடட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை கையளிப்பது தொடர்பில் தாம் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அழுத்தங்களை விடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைவர் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (CoPE)தெரிவித்த கருத்தை தாம் வன்மையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் கொள்கையானது ஒவ்வொரு செயற்திட்டத்தையும் மிகவும் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் உரிய முறைமையிலும் வழங்குவதாகும். இலங்கைக்கு மின்சக்தி அத்தியாவசியமாக உள்ள  இச்சந்தர்ப்பத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறை தொடர்பில் பாரியளவிலான திட்டங்களுக்கு கிடைக்கும் கேள்வி குறைவாக உள்ளதால், அவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டாலும், செயற்திட்டங்களுக்காக  நிறுவனங்களைத் தெரிவு செய்யும்போது அரச கொள்கைகளுக்கேற்ப வெளிப்படையான செயல்முறையின் கீழ்  நடைமுறைப்படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

கோப் குழுவில் கருத்தை வெளியிட்ட மின்சார சபைத் தலைவர் மீண்டும் வாபஸ்
இதேவேளை, மின்சக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்துவதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்டினாண்டோ கோப் குழுவில் தெரிவித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (10) கோப் குழுவில் ஆஜராகியிருந்த அவர், இக்கருத்தை வெளியிட்டிருந்த நிலையில், தாம் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக, நேற்று (11) அறிவித்தார்.

மின்சார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் வேலைப்பளு காரணமாக உணவு கூட உட்கொள்ளாமல் செயற்பட்டமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வௌியிடப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

ஜனாதிபதியோ, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரோ அல்லது இந்திய தூதரகத்தினாலோ தாம் கருத்தை வாபஸ் பெறும் நிலைப்பாட்டிற்கு அழுத்தம் விடுக்கப்படவில்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...