ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல்; சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக எம்.பிக்கள் கைது

மே 09 இல் கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோர் CID யினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவங்களுக்கு காரணமான 22 சந்தேகநபர்களின் பெயர்களை அது தொடர்பான வழக்கில் பெயரிடப்பட்ட நிலையில் குறித்த இருவரும் கைதாகியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் 22 பேருக்கும் எதிராக போதிய சாட்சியங்கள் இருப்பின் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியமைக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை (12) வெளிநாடு செல்வதற்கு எதிரான பயணத் தடை விதித்திருந்தது.

கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற 'கோட்டா கோ கம' மற்றும் 'மைனா கோ கம' அமைதி போராட்டங்கள் மீது, அலரி மாளிகையிலிருந்து வந்த SLPP ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பதவி விலகிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்களான நாமல் ராஜபக்‌ஷ, ஜோன்ஸ்டன் பெனாண்டோ, சனத் நிஷாந்த, பவித்ரா வன்னியாரச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன ஜயரத்ன, ரோஹித அபேகுணவர்தன, சீ.பி. ரத்நாயக்க, சம்பத் அத்துகோரள, ரேணுக பெரேரா மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக குறித்த தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...