பிறக்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் மரணம் நிச்சயமானதுதான். இம்மாதம் 03 ஆம் திகதி லண்டனில் தமது 87 வயதில் இயற்கை எய்தியிருக்கும் மூத்த தொழிற்சங்கவாதியும், தமிழ் உணர்வாளரும், சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளரும், ஆவணப் பதிவாளருமான ஐ.தி. சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழுலகில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி முன்னாள் மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தருமலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோருடன் ஒன்றாக மரணமடையும் ஆபத்தில் இருந்து தப்பிக் கொண்டவராவார்.
அவர்களுடன், இவரையும் கொலை செய்வதற்கென வந்த தமிழ் இளைஞர்களிடமிருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பியவர். அக்காலப் பகுதியில் அத்தகைய கொலைகளைச் செய்பவர்களை இனந்தெரியாதவர்கள் என்றுதான் பத்திரிகை ஊடகங்கள் பதிவு செய்தன.
ஐ.தி. சம்பந்தன் அவர்கள், தான் ஆழமாக நேசித்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனைத்து அவலங்களையும், அவர் நெருங்கிப் பழகிய பல தமிழ்த் தலைவர்களின் மரணங்களையும் பார்த்து விட்டே இம்மாதம் நிரந்தரமாக கண்ணயர்ந்து விட்டார்.
காரைநகர் பூமியில் 26.06.1935 ஆம் திகதி மத்தியதர குடும்பத்தில் பிறந்த சம்பந்தன் அவர்கள், தமது இளமைக்காலம் முதலே தமிழர் உரிமை சார்ந்து இயங்கிய சமூகப் போராளி.
அவரை கொழும்பில் துறைமுக அதிகார சபையில் பணியாற்றிய எழுத்தாளரும், நாவலர் சபை, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியனவற்றில் முக்கிய பொறுப்புகளிலிருந்த (அமரர்) சோமகாந்தனை சந்திக்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் பார்த்து பேசியிருக்கின்றேன்.
வருடத்தில் வரும் செப்டெம்பர் மாதங்களை தன்னால் மறக்க முடியாது என்றும், அத்தகைய ஒரு மாதத்தில் 1985 ஆம் ஆண்டு, தான் எவ்வாறு உயிர்தப்பினேன் என்பதை விரிவாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன், இலங்கைத் தமிழ் மக்கள் சார்ந்து ஆவணப்படுத்தல் பணிகளிலும் ஆக்கபூர்வமாக உழைத்திருப்பவர். அவர் எழுதிய நூல்கள் அதற்குச் சிறந்த சான்று.
1985 இல் அவர் உயிர்தப்பியிருந்தாலும், அதற்கு முன்பே 1958 இல் கொழும்பில் நடந்த கலவரத்தின் போதும் எவ்வாறு தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என்ற கதையையும் 2009 இல் எழுதி வெளியிட்ட Black July 83 : Indictment கறுப்பு யூலை 83 : குற்றச்சாட்டு என்ற ஆங்கில – தமிழ் நூலிலும் விரிவாக பதிவு செய்துள்ளார்.
இந்த நூல் இலங்கை அரசியல் வரலாற்றை படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் உசாத்துணையாகவும் விளங்குகிறது.
தான் எழுதும் ஆவணங்களில் அவர் முக்கியமான அரிய ஒளிப்படங்களையும் தவறாமல் பதிவேற்றி ஆதாரம் காண்பிப்பதிலும் அக்கறை கொண்டிருந்தவர். அத்தகைய ஆவண ஏடுகளுக்காக அவர் செலவிட்ட நேரம் அதிகம். இதுவிடயத்தில் அவர் அயராத உழைப்பாளியாகவே திகழ்ந்தார்.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி காலை, கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்கு வணங்கச் சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்ட தமது ஊரைச் சேர்ந்தவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் அவர்களைப் பற்றியும் சம்பந்தன் ஒரு விரிவான நூலை எழுதியிருக்கிறார்.
மொழிவழி தொழிற்சங்களின் தேவையை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கும் சம்பந்தன், இதுதொடர்பாக விரிவான பேட்டியையும் வழங்கியிருந்தார்.
1985 ஆம் ஆண்டிற்குப்பின்னர் செயல் இழந்து விட்ட தமிழ் தொழிற்சங்க கூட்டணிக்கு மீண்டும் புத்துயிர்ப்பு வழங்க வேண்டும் என்பதும் சம்பந்தனின் வேண்டுகோளாகவிருந்தது.
தன்னால் இயன்றவரையில் இலங்கைத் தமிழ் இனத்திற்காக பல்வேறு வழிகளில் குரல் கொடுத்துவந்த ஐ. தி. சம்பந்தன், இம்மாதம் 03 ஆம் திகதியுடன் பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்திக் கொண்டார். அன்னாருக்கு எமது இதய அஞ்சலி.
லெ.முருகபூபதி
(எழுத்தாளர், ஊடகவியலாளர்)
அவுஸ்திரேலியா
Add new comment