அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல தடை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கும் உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (07) அறிவித்தது.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெகுணவெல இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேலதிக நீதவான் அழைப்பாணை விடுத்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2006 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி அமெர்காவின் இமாத் ஷா சுபைரிக்கு, இலங்கை அரசின் 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், குற்றவியல் சட்டத்தின் கீழ், அஜித் நிவாட் கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த போது, 2022 ஜனவரி 18ஆம் திகதி செலுத்த வேண்டிய முறிப் பத்திரங்கள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த  காலத்தில், அங்குள்ள பதவிகளுக்கு தனது நெருங்கிய உறவினர்களை நியமித்ததன் மூலம் இரகசியத் தகவல்களை வெளியிட்டதன் மூலம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் இலங்கை அரசாங்கம் ரூ. 10.04 பில்லியன் ரூபாவை நஷ்டமடைந்துள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அவரை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இதனையடுத்து, விடயங்களை கருத்தில் எடுத்த நீதவான், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கும் உத்தரவை பிறப்பித்தார்.


Add new comment

Or log in with...