திருகோணமலை - புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி மாணவர்களும், பெற்றோர்களும் இன்று (16) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பிரதான கதவை மூடி மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திறமையான மாணவர்கள் பலர் உள்ளோம். ஆனால் வழிநடாத்த ஆசிரியர்கள்தான் இல்லை. 1200 மாணவர்களுக்கு 24 ஆசிரியர்கள் எந்த விதத்தில் நியாயம். திறமையான மாணவர்களை வழி நடாத்த ஆசிரியர் தா. இடமாற்ற அதிகாரம் உள்ள ZDEக்கு ஆசிரியர்கள் தர அதிகாரம் இல்லையா? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1905 ஆம் ஆண்டு புல்மோட்டையில் முஸ்லிம் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு தற்போது தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டிருந்த நிலையில் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் வேளையில் 64 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போரிலும் 24 ஆசிரியர்கள் மாத்திரமே கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
தங்களது மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பலதடவைகள் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் ஸ்ரீதரனை கேட்டபோது புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் 49 ஆசிரியர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போதும் 29 ஆசிரியர்கள் கடமையாற்றி வருவதாகவும் நேற்று 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பட்டதாரி நியமனம் பெற்ற 07 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமித்துள்ளதுடன் திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியர் ஒருவரையும் புல்மோட்டை அறபா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியர் ஒருவரையும் புல்மோட்டை மத்திய கல்லூரிக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
Add new comment