முச்சக்கரவண்டி சாரதி சடலமாக மீட்பு

மட்டக்களப்பு தலைமையகப்  பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய உப்போடை  பார் வீதியில்  முச்சக்கரவண்டி சாரதி  ஒருவர் முச்சக்கரவண்டியுடன் உயிரிழந்த நிலையில்  சடலமாக   மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதியின் சடலம்  இன்று (25) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கருவப்பங்கேணியைச் சேர்ந்த  2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மாசிலாமணி தர்மரட்ணம் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டு ரயில்நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில்  கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தடையும்  புகையிரத பிரயாணிகளை ஏற்றிச்செல்வதை தொழிலாகக் கொண்டிருந்தார்.

புகையிரத நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து புன்னைச்சோலை பகுதிக்கு பிரயாணி ஒருவரை ஏற்றிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.   முச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் அருகே உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை   மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

(சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு விசேட நிருபர்)


Add new comment

Or log in with...