2016 இராஜகிரிய விபத்து தொடர்பில் கடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக சமர்ப்பித்த மருத்துவ அறிக்கை பொய்யானது எனவும், விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சட்ட மாஅதிபர் விடுத்த கோரிக்கையை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக, சம்பிக்க ரணவகவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (21) இடம்பெற்ற வழக்கு விசாரணை தொடர்பில் ஒரு சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்றைய விசாரணையில், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை வழமை போன்று நடத்துவதற்கான திகதியை அறிவித்ததாகவும், அதன்படி வழக்கின் விசாரணை பெப்ரவரி 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
மருத்துவ அறிக்கைகள் தவறானவை என சட்ட மாஅதிபர் தரப்பு வாதம் கேலிக்குரியது என தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, சம்பிக்க ரணவகவின் உடல் நிலை குறித்தும் விரிவாக விளக்கமளித்தார். அரசியல் இலாபம் கருதி மருத்துவ அறிக்கைகள் தொடர்பில் செயற்கையான சந்தேகங்களை ஏற்படுத்த சட்ட மாஅதிபர் திணைக்களம் முயற்சிப்பது பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சிலர் சிங்கப்பூர் போன்ற தூர நாடுகளுக்குச் சென்று வைத்தியசாலைகளில் தங்கி நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்ததை நினைவுபடுத்திய சட்டதரணி, சம்பிக்க ரணவக்க ஒருபோதும் நீதிமன்ற அழைப்பாணையை மீறியதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
ரணவக்கவின் உடல் நிலை குறித்தும் அவர் விரிவாகப் பேசினார். அரசியல் நலன் கருதி மருத்துவ அறிக்கைகள் தொடர்பில் செயற்கையான சந்தேகங்களை ஏற்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிப்பது பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “1000 CC மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்வகை மோட்டார் சைக்கிள் நெடுஞ்சாலைகளில் செல்ல அனுமதிக்கப்படாத மோட்டார் சைக்கிளாகும். ஆயினும் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்களை மாற்றியமைத்து, சட்ட மாஅதிபர் திணைக்களம் அத்தகைய நிலைக்கு சென்றுள்ளமை அரசியல் தேவைக்காக என்பது தெளிவாகின்றது." என்றார்.
இவ்வாறு நடந்து கொள்ளும் சட்ட மாஅதிபர் திணைக்களம் தற்போது முறையான மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ நிலைமைகளை கூட ஏற்றுக்கொள்ளாத நிலைக்கு வந்துள்ளதாக பிரேமரத்ன சுட்டிக்காட்டினார்.
அரசியல் இலாபங்களுக்காக பாட்டலி சம்பிக்க ரணவக்கவை சிறையில் அடைக்க அரசாங்கத்தின் ஒரு சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் சட்டத்தின் முன் தோல்வியடையவுள்ளதுடன், ஊடக கண்காட்சிகள், சிறைக்கு அனுப்புதல் போன்ற அரசாங்கத்தின் பலவீனமான நடவடிக்கைகளின் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் பலவீனத்தை மறைக்க முடியாது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியான திலும் துசித குமார ஆகியோர் குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
Add new comment