ஓய்வு பெறும் முடிவை மாற்றினார் பானுக ராஜபக்‌ஷ

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது தனிப்பட்ட காரணங்களைக்காக பானுக ராஜபக்ச சமீபத்தில் தனது ஓய்வு பெறும் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளித்திருந்தார்.

இந்நிலையில், அவசர முடிவுகளை எடுக்க வேண்டாமென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததுடன், குறித்த இராஜினாமா கடிதத்தை மீளப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரராக நாட்டுக்காக விளையாட இன்னும் கால அவகாசம் இருப்பதால் அவசர முடிவுகளை எடுப்பதை விட சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவதே முக்கியம் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியிருந்தார்.

தமது தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட்டிலிருந்து விலகுவதற்கு வீரர்களுக்கு முழு உரிமை உண்டு என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், நிர்வாகத்தில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது அநீதி இழைக்கப்பட்டாலோ தலையிட வாய்ப்பு இருப்பதாக மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை தேசிய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெற விரும்பும் அல்லது ஓய்வு பெற்றுள்ள வீரர்கள் தொடர்பாக 3 நிபந்தனைகளை விதிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் ஒரு சில வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்து வருகின்றனர் என்பதோடு, இலங்கை கிரிக்கெட்டால் உடற் தகுதி தொடர்பான இறுக்கமான கொள்கைகள் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...