ரொஹிங்கிய அகதிகளுடன் நிர்க்கதியான படகு ஒன்றுக்கு கரைக்கு வர அனுமதிப்பதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. இந்த படகுக்கு அனுமதி அளிக்கும்படி உரிமைக் குழுக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தோனேசிய கடற்பகுதியில் இருக்கும் இந்த படகில் உள்ள அகதிகளுக்கு அச்சேவின் உள்ளூர் அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை உணவு மற்றும் மருந்துகளை வழங்கியபோதும் அவர்களது தஞ்சக்கோரிக்கையை நிராகரித்திருந்தனர்.
“அச்சே, பிரியுன் மாவட்டத்திற்கு அருகில் தற்போது மிதந்து வரும் படகில் இருக்கும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதற்கு மனிதாபிமானத்தின் பெயரால் இந்தோனேசிய அரசு தீர்மானித்துள்ளது” என்று இந்தோனேசிய தலைமை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கடந்த புதனன்று தெரிவித்தார்.
“படகில் இருக்கும் அகதிகளின் அவசர நிலையை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த படகில் சுமார் 120 அகதிகள் இருப்பதோடு பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.
நிர்க்கதியான இந்தப் படகு சிலநாட்களுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக இரு மீனவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
There is 1 Comment
Human as one family.
Add new comment