சீன சிறையிலிருந்து தப்பிய வடகொரிய கைதி பிடிபட்டார்

சிறையிலிருந்து தப்பியோடிய வட கொரியக் கைதியை சீன பொலிஸ் அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

அந்த 39 வயது கைதி, கடந்த மாதம் 18ஆம் திகதியன்று ஜிலின் நகரிலிருக்கும் சிறைச்சாலையின் வெளிப்புறச் சுவரில் ஏறித் தப்பியதாக நம்பப்படுகிறது.

வடகிழக்குச் சீனாவில் உள்ள அதிகாரிகள் அந்தக் கைதியைப் பிடிப்பதற்கு 23,000 டொலர் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் இணையவாசிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

2013ஆம் ஆண்டில் அவர் வட கொரியாவிலிருந்து சட்டவிரோதமாக சீனாவுக்குள் நுழைந்து, அங்கிருந்த சில வீடுகளில் புகுந்து திருடியதாகக் கூறப்படுகிறது.

அவரைக் கண்டுபிடித்த மூதாட்டி ஒருவரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது. தப்பிக்க முயன்ற அவரைப் பின்னர் பொலிஸார் கைதுசெய்தனர். சட்டவிரோதமாகச் சீனாவில் நுழைந்தது, திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. அவர் 2023ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வட கொரியாவுக்கு அனுப்பப்படவிருந்தார்.

வட கொரியாவிலிருந்து தப்பித்துள்ள சுமார் 1,100 பேர் சீனாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் எனும் மனித உரிமைக் குழு குறிப்பிட்டது.