- இன்று கிண்ணியாவில் முழு நாள் துக்கதினம் அனுஷ்டிப்பு
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்து 6 பேர் பலியான சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா- குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக நான்காவது சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (25) மாலை ஆஜர்படுத்திய போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா குறிஞ்சாக் கேணி மிக்கு படகை பாவனை செய்வதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த தவிசாளர் அனர்த்தம் இடம்பெறுவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்காவது சந்தேக நபர் என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்
இதேவேளை தண்டனைச் சட்டக்கோவை 298,273 , 275 ஆகிய தண்டனை சட்டக்கோவைகளின் அடிப்படையில் கிண்ணியா பொலிஸார் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இருந்தபதிலும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் விளக்கமறியலில் இருப்பதாகவும் நான்காவது நபரான குறித்த கிண்ணியா நகர சபை தவிசாளரான எஸ்.எச்.எம்.நளீம் விளக்கமறியலில் வைக்குமாறும் கிண்ணியா பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்த திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவர் நேற்றையதினம் (24) கைது செய்யப்பட்டு டிசம்பர் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த அனர்த்தத்தில் இறந்தவர்களுக்காக கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
கிண்ணியா பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகரசபை மக்களால் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது கிண்ணியாவில் உள்ள 66 பாடசாலைகளும் மாணவர்கள், ஆசிரியர்கள் வரவு இன்றி, மூடப்பட்டிருந்தன. அரச மற்றும் தனியார் திணைக்களங்களும் ஊழியர்களின் வரவில்லையால் இயங்கவில்லை. பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை. வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
வைத்தியசாலைகளில் வழமைபோன்று சேவைகள் நடைபெற்றன.
மக்கள் வீடுகளிலும் வீதிகளிலும் வெள்ளைக் கொடிகளை ஏற்றி தங்களுடைய துக்கத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதேபோன்று மரணித்தவர்களின் ஈடேற்றத்திற்காகவேண்டி, இன்றைய தினம் மக்கள் நோன்பு நோற்று வீடுகளில் இருந்தவாறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
(ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம், கிண்ணியா மத்திய நிருபர் - கியாஸ், முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர், கந்தளாய் தினகரன் நிருபர்)