நோயாளரின் கடமைகள்

நோயாளரின் கடமைகள்-Patient in Islam

அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்பதும், அவனது சோதனையில் பொறுமையுடன் இருப்பதும், தன் அதிபதியான அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பதும் ஒவ்வொரு மனிதனினதும் பொறுப்பாகும். அந்த வகையில் ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'நம்பிகையாளரின் செயல்களைப் பார்த்து வியப்படைகின்றேன். அவனுடைய எல்லாச் செயல்களும் நன்மையைத் தருகின்றன. இது நம்பிக்கையாளரை (முஃமினை)த் தவிர வேறு யாருக்கும் கிடைக்காது. மகிழ்ச்சி ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மை பயக்கிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமையைக் கையாள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையையே அளிக்கிறது' எனவும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவனாகவே அன்றி யாரும் இறக்க வேண்டாம்' எனவும் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத், பைஹகி)

அதேநேரம் நோயாளர் அச்சத்திற்கும், ஆதரவுக்கும் மத்தியில் இருப்பது அவசியம். தன் பாவங்களுக்காக அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சிக் கொண்டும், அவன் அருளில் ஆதரவு வைத்துக் கொண்டும் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மரணத் தருவாயிலிருந்த ஒரு வாலிபனைக் காணச் சென்று, 'உன் நிலையென்ன?' எனக் கேட்டார்கள். அதற்கு அந்த வாலிபன் 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல்லாஹ்வின் நல்லருளை விரும்புகிறேன், என் பாவங்களை எண்ணி அஞ்சிக் கொண்டிருக்கிறேன்' எனக் கூறினார்.'இம்மாதிரியான மரண வேளையில் ஓர் அடியானின் உள்ளத்தில் இவ்விரண்டும் ஓன்று சேர்ந்தால் அல்லாஹ் அவன் விரும்பியதைக் கொடுத்து அவன் அஞ்சுவதை இல்லாமலாகுவான்' எனவும் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா)

ஆனால் நோய் தீவிரமாகக் காணப்பட்டாலும் மரணத்தை வேண்டுவது கூடாது. தேவையானால், 'யா அல்லாஹ்! எனக்கு வாழ்க்கை நன்மை பயக்குமாயின் வாழச் செய்வாயாக! எனப் பிரார்த்திக்கலாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், ஹாகிம்)

நோயாளர்களிடம் மற்றவர்களின் உடமைகள் இருந்தால் அவற்றை ஒப்படைத்து விட வேண்டும் அல்லது அது பற்றி 'வஸிய்யத்' செய்து (விவரமான மரண சாசனம் எழுதி) விட வேண்டும். இது நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும். (ஆதாரம்: புகாரி, பைஹகி). நோயாளர் 'வஸிய்யத்' (மரண சாசனம்) செய்வது கட்டாயமாகும்.

ஏனெனில் வஸிய்யத் எழுதப்பட்ட ஓலையை தன் தலைக்கடியில் வைக்காது இரண்டு இரவுகளைக் கழிப்பது ஒரு முஸ்லிம்க்கு ஆகாத செயல் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபிமொழியைக் கேட்ட நாளிலிருந்து ஒவ்வொரு இரவும் நான் எனது மரண சாசனத்தை எழுதி வைத்துக் கொள்ளாது இருக்கவில்லை என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபுதாவூத், திர்மிதி)

நோயாளரின் பொருட்களில் சொத்துரிமையற்ற மக்களுக்கு வஸிய்யத் செய்வது கட்டாயமாகும். ஏனெனில், 'உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விட்டதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத் (மரண சாசனம்) செய்வது விதியாக்கப் பட்டிருக்கிறது, (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும். (அல் குர்ஆன் 2:180).

மேலும் நோயாளர் தன் செல்வங்களிலிருந்து மூன்றிலொரு பகுதியை மரண சாசனம் செய்யலாம். இதைவிட அதிகப்படுத்துவது கூடாது. குறைத்துக்கொள்வது கூடும்.

இது தொடர்பில் ஸஃதிப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் இறுதி ஹஜ்ஜின் போது நானும் சென்றிருந்தேன், அவ்வேளை கடுமையாக நோய் வாய்ப்பட்டேன். நபியவர்கள் என்னிடம் வந்து நலம் விசாரித்தார்கள். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் அதிகம் செல்வங்கள் உள்ளன.

எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருக்கிறது, ஆகவே என் செல்வங்களில் மூன்றில் இரு பங்கை மற்றவர்களுக்கு வஸிய்யத் செய்யட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அவ்வாறு செய்ய வேண்டாம்' என்று கூறினார்கள்.

அப்படியானால் சரிபாதியையாவது வஸிய்யத் செய்யட்டுமா? எனக் கேட்க அதற்கும் 'வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மூன்றில் ஒரு பங்கையாவது வஸிய்யத் செய்யட்டுமா? என மீண்டும் கேட்க, மூன்றில் ஒரு பங்கு! மூன்றில் ஒரு பங்கும் அதிகமே. ஸஃதே! உன் வாரிசுகளை பணக்காரர்களாக இருக்கச் செய்வது அவர்கள் பிறர் உதவியை எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்களாய் ஆகி விடுவதை விட மேலானதாகும். ஸஃதே! அல்லாஹ்வுக்காக நீர் செலவு செய்வது உனக்கு நற்கூலியைத் தரும். உன் மனைவிக்குக் கொடுக்கும் ஒரு கவளம் உணவும் நன்மையையே தரும்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:புஹாரி, முஸ்லிம்)

ஆகவே நோயாளர்களும் நோய்களுக்கு உள்ளாகின்றவர்களும் நபிகளாரின் போதனைகளுக்கு ஏற்ப தம் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது அவசியமாகும்.