மனித இதயங்களிலிருந்து வன்முறை அகல கடவுளை மன்றாடுவோம்

Pope Francis

- உலக அமைதிக்காக மதத் தலைவர்களோடு இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் செபம்

பல்வேறு மதங்கள் மற்றும் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களோடு இணைந்து உரோம் மாநகரில் கடந்த வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் உலக அமைதிக்காக செபம் செய்தார்.

உரோம் ‘சான் எஜிதியோ’ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு இரு தினங்கள் ஏற்பாடு செய்திருந்த உலக அமைதிக்கான பன்னாட்டு மாநாட்டில் நாற்பது நாடுகளிலிருந்து கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம், பௌத்தம், இந்து, மற்றும், சீக்கியம் உள்ளிட்ட மதங்களின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர்.

"மக்கள் அனைவரும் உடன்பிறப்புக்களாக வருங்கால பூமி" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் அசிசி நகர் புனித பிரான்ஸிசின் உணர்வில் நட்பு மற்றும், உரையாடலை ஊக்குவிப்பதை எவ்வாறு மீண்டும் தொடங்குவது என்பது தொடர்பில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.இக்கூட்டத்தின் நிறைவு நிகழ்வில் மதத் தலைவர்களோடு இணைந்து அமைதிக்காகச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் அனைவரது இதயங்களிலும் அமைதி குடிகொள்ளும் வகையில் இதயங்கள் தூய்மைப்படுத்தப்படுவதற்கு உழைக்குமாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.

வன்முறையற்ற இதயங்கள் உருவாக யுத்தங்களில் பலியானவர்களுக்காக மதத் தலைவர்கள் அமைதியாக செபித்தனர். திருத்தந்தை ஆற்றிய உரையில் மனித இதயங்களில் வன்முறை அகலவேண்டும் என கடவுளை மன்றாடுவோம் என கேட்டுக்கொண்டார். வெறுப்பால் நிறைந்துள்ள இதயங்கள் அதனை அகற்றி அமைதியைக் கொணரவும் சக்தியளிப்பதன் ஊற்றாக இருப்பது தொடர்பில் உரையாற்றினார் திருத்தந்தை.

முன்னொரு காலத்தில் மனிதர்கள் ஒருவர் ஒருவருக்கெதிராக சண்டையிட்டு பெருமளவில் இறந்ததைப் பார்த்து இரசித்த கேளிக்கை அரங்கில் இச் செப நிகழ்வு நடைபெறுகின்றது என்பதை நினைவுபடுத்திய திருத்தந்தை உடன்பிறப்புக்களே உடன்பிறப்புக்களைக் கொலைசெய்வதை தொலைதூரத்தில் நடைபெறும் ஒரு விளையாட்டாக கருதினால் வன்முறை மற்றும் யுத்தத்தை இரசிப்பவர்களாக நாமும் மாறிவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

வன்முறைகளுக்குப் பலியாவோரைப் புறக்கணிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர், நம் சகோதர சகோதரிகளுக்கு நிகழ்வது அனைத்தும் நம்மையும் பாதிக்கின்றன என்ற உண்மையை உணர்வதற்கு மிகுந்த துணிச்சல் தேவை என்றார்.

யுத்தம் மனித உயிர்களோடு விளையாடுகின்றது. அது அரசியல் மற்றும் மனித சமுதாயத்தின் இயலாத் தன்மையை எடுத்துரைக்கின்றது.

2019ம் ஆண்டில் தாம் வெளியிட்ட ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்ற நூல் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனித இதயங்களிலிருந்து வன்முறையை முற்றிலும் அகற்றுவதற்கு மதங்களுக்கு உள்ள கடமையை வலியுறுத்தினார்.

மனித இதயங்களிலிருந்து காழ்ப்புணர்வைக் களைவதற்கும் வன்முறையின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிராகக் கண்டனம் செய்வதற்கும் உதவவேண்டியது மதங்களின் கடமை என்றுரைத்த திருத்தந்தை, அமைதியின்றி மக்கள் ஒருபோதும் சகோதர சகோதரிகளாக நிலைத்து வாழ இயலாது என்றும் குறிப்பிட்டார்.

மேரி தெரேசா