கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய (WCT) அபிவிருத்தி (உருவாக்கல், இயக்குதல், பரிமாற்றல்: build-operate-transfer (BOT)) தொடர்பான ஒப்பந்தம் இன்று (30) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதானி குழுமம் அதன் உள்ளூர் கூட்டாளரான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ( John Keells Holdings) மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இவ்வாறு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
700 மில்லியன் டொலர் முதலீடு தொடர்பான குறித்த ஒப்பந்தம் இன்று (30) காலை கொழும்பில் கையெழுத்திடப்பட்டதுடன், இந்தியாவின் அதானி குழுமத்தின் உறுப்பினர்கள் ஒன்லைன் மூலம் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி தொடர்பில், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியன முன்வந்திருந்த நிலையில், கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனைய நடவடிக்கை தொடர்பில் ஒப்பந்தம் வழங்க அமைச்சரவை முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.