சதோச வெள்ளைப்பூடு விவகாரம்: அமைச்சர் பந்துலவிடம் CID வாக்குமூலம் பதிவு

சதொச நிறுவனத்திற்கு சேரவேண்டிய இரண்டு கொள்கலன் வெள்ளைப்பூடு வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குற்றத் தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பில் வர்த்தக அமைச்சு தெரிவிக்கையில்:

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின்பணிப்பாளரினால் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பிலும் மற்றும் வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸ் மாஅதிபரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவும் மேற்படி வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேற்படி நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தகவல் மற்றும் விபரங்கள் உள்ளடங்கிய முழுமையான சாட்சியக் கோவை ஒன்றை அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்திடம் சமர்ப்பித்து ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்