ரஷ்ய பொதுத் தேர்தலில் புட்டின் கட்சி பெருவெற்றி

ரஷ்ய பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்ய கட்சி மற்றொரு பெரு வெற்றியை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாக்குப் பதிவு முடிவுற்ற சில மணி நேரங்கள் கடந்த நிலையில் அந்தக் கட்சி வெற்றியை அறிவித்துள்ளது.

புட்டின் எதிர்ப்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது தடுக்கப்பட்டதோடு அதிக கெடுபிடிக்கு பின்னரே வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டிருந்தனர். வாக்குச் சீட்டு மோசடி மற்றும் கட்டாய வாக்குப் பதிவு போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஆரம்ப முடிவுகளின்படி 64 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஐக்கிய ரஷ்ய கட்சி 48 வீதமான வாக்குகளை வென்றிருப்பதோடு கம்யூனிஸ்ட் கட்சி 21 வீத வாக்குகளை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் 450 ஆசனங்களில் தமது கட்சி 300க்கும் அதிகமான இடங்களை வெல்லும் என்று ஐக்கிய ரஷ்ய கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.