அனைத்து பஸ் உரிமையாளர்களுக்கும் ரூ.150,000 நிவாரண பொதி கோரும் கெமுணு விஜேரத்ன

சாரதி, நடத்துனர்களுக்கும் ரூ. 25,000 கோரல்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் அக்டோபர் மாதம் நிறைவடைந்து நாடு திறக்கப்படும்போது, அனைத்து தனியார் பயணிகள் பஸ் வண்டிகளும் சேவையிலீடுபட வேண்டுமாயின் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கான நிவாரணப் பொதியொன்று தங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பஸ் நடத்துனர்கள் மற்றும் சாரதிகளுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு ஒன்றும் வழங்கப்படவேண்டுமென அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முன்வைத்த நிவாரணப்பொதி தொடர்பில் வரவேற்ற அவர், இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தான் முன்வைத்த நிவாரணப் பொதி நாடுமுழுவதுமுள்ள சுமார் 20,000 தனியார் பஸ்உரிமையாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்ட அவர் நீண்ட காலமாக இயங்காத தனியார் பஸ்களின் டயர், பெட்டறி உள்ளிட்ட உதிரிப்பாகங்களை மீண்டும் இயங்க வைக்க பெருந்தொகை பணம் செலவாகுமென்றும் குறிப்பிட்டார்.