ஒன்லைனில் கற்பிக்கும் ஆசிரியர்களின் பணியில் குறுக்கிடும் நபர்களுக்கு எதிராக CID இற்கு முறைப்பாடு வழங்க முடியுமெனவும், அவசியம் ஏற்பட்டால் 119 ஐ அழைக்குமாறும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் தாமதமின்றி, சரியான வகையிலும் மிகவும் இறுக்கமாக சட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகரவினால் பொலிஸ் மாஅதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அரசு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் அச்சுறுத்தல் விடுத்தல் ஆகியன குற்றம் என்பதோடு, அவ்வாறு செய்யும் நபர்களுக்கு எதிராக இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் ஒன்லைன் கற்பித்தல் பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியில், ஒரு சில ஆசிரியர்களால் மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் கற்பித்தல் மேற்கொள்ளும் நிலையில், அவர்களுக்கு எதிராக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை அடுத்து, இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.