இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கை யுவதி கைது

இந்தியாவில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (6) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி (வயது-19) என்ற யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் சென்று இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கடந்த 2018 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விசா முடிந்த பின்னர் இலங்கைக்கு திரும்பிச் செல்லாமல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் சட்டவிரோதமாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இலங்கைக்கு திரும்பிச் செல்வதற்காக நேற்று (6) அதிகாலை தனுஷ்கோடியில் இருந்து நாட்டுப் படகு மூலம் சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டுப் பகுதியில் இந்திய கடலோர காவல்படை ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இராமேஸ்வரம் மெரைன் ெபாலிசார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஷ்கோடி அழைத்து வந்தனர்.

கஸ்தூரியிடம் மெரைன் பொலிசார் முதல் கட்ட விசாரணை செய்து பின் இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சமீப காலமாக இலங்கை மக்கள் சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகம் வந்து வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்கின்றனர்.

எனவே பிடிபட்ட இலங்கைப் பெண் கஸ்தூரி வெளிநாடு செல்ல தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டு படகில் அழைத்துச் சென்ற முகவரை தேடி வருகின்றனர்.

கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப் நிருபர்

 

Add new comment

Or log in with...