மீண்டு(ம்) எழுமா ஐ.தே.க.?

- ஐ.தே.க.வுக்கு இன்று 75 வருட பூர்த்தி

ஆசியாவில் பழமையான அரசியல் கட்சிகளுள் ஒன்றான ஐக்கிய தேசியக்கட்சி இன்று 76ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. 

ஆளுங்கட்சி அவ்வாறு இல்லாவிட்டால் பிரதான எதிர்க்கட்சியென முக்கிய இரு நிலைகளில் கடந்த 75 ஆண்டுகாலம் அரசியல் பயணத்தை மேற்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சிக்கு, கடந்த பொதுத்தேர்தலே மரண அடியாக அமைந்தது. வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டது.

1956 இல் நடைபெற்ற இலங்கையின் 3ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. முதல் மற்றும் 2ஆவது பொதுத்தேர்தல்களில் வெற்றிநடைபோட்ட ஐ.தே.கவால் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறமுடிந்தது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தும் பறிபோனது. அதன்பிறகு 2020இல்தான் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது எனலாம்.

எனினும், 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஐக்கிய தேசியக்கட்சி வரலாற்று சாதனை படைத்தது. அந்த சாதனையை கடந்த பொதுத்தேர்தலில் மொட்டு கட்சி முறியடித்தது. 77 இல் தொகுதிவாரியாக தேர்தல் நடைபெற்றது. 2020 இல் விகிதாசார விருப்பு வாக்குமுறை. அந்த முறைமையின்கீழ் கட்சியொன்று பெற்ற பெரும் வெற்றி அதுவாகும்.

மீண்டு(ம்) எழுமா ஐ.தே.க.?-UNP's 75th Anniversary

அதேவேளை, 56 இல் வீழ்ந்தோம், அதன்பின்னர் எழுந்தோம். அவ்வாறே 2020 இல் வீழ்ந்தோம், 2024 இல் ஆட்சியை பிடிப்போம் என ஐக்கிய தேசியக்கட்சி தற்போது சூளுரைத்துவருகின்றது. ஆனால் அதற்கான திட்டங்கள் விபரிக்கப்படவில்லை.  ஐ.தே.கவின் புதிய பயணம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்றவுள்ளார். அதன்போது தெளிவுபடுத்துவார் என நம்புவோமாக.

ஐக்கிய தேசியக்கட்சிக்கும் மலையக அரசியலுக்கும் நிறையவே தொடர்புகள் உள்ளன. ஒரு புறத்தில் துரோகம், மறுபுறத்தில் நன்மைகள் என பட்டியலிடலாம்.

1947 இல் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிகாலத்தில்தான் மலையக மக்களின் குடிரியுமை, வாக்குரிமை பறிக்கப்பட்டன. அதே ஆட்சியின்கீழ்தான் மீள ஒப்படைக்கப்பட்டன.

ரணிலின் தலைமைத்துவமும், ஐதேகவும்
அரசியலில் தந்திரம், மந்திரம், நெளிவு, சுழிவு, சூழ்ச்சி, சதி என அத்தனை அம்சங்களையும் கரைத்து குடித்துள்ள ரணில் விக்ரமசிங்க, கால்நூற்றாண்டுக்கு மேலாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இதுவும்கூட ஒருவகையான சாதனையாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இதற்கு முன்னர் ஐ.தே.கவுக்கு தலைமை தாங்கியவர்கள் இத்தனை ஆண்டுகள் பதவியில் நீடிக்கவில்லை.

1947  முதல் 2020 வரை நடைபெற்றுள்ள 16 பொதுத்தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி யானை சின்னத்திலேயே போட்டியிட்டது. இதில் 6 தேர்தல்களுக்கு ரணில் விக்ரமசிங்க தலைமை வழங்கியுள்ளார். இரண்டு தேர்தல்களில் மட்டுமே ஐ.தே.கவால் வெற்றிநடைபோடமுடிந்தது. (2001,2015).

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அவ்வப்போது பிளவுகள் ஏற்பட்டிருந்தன. முக்கிய உறுப்பினர்கள் வெளியேறியும் இருந்தனர். ஆனால், சஜித் தலைமையிலான அணியின் வெளியேற்றமே பெரும் தாக்கமாக அமைந்தது. 

ரணில் சந்தித்த பொதுத்தேர்தல்கள்…
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 1970 ஆம் ஆண்டுமுதல் செயற்பாட்டு அரசியலில் இறங்கினாலும் 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்தான் முதல் தடவையாக போட்டியிட்டார்.

1977 ஜுலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலுள்ள பியகம தொகுதியில் – கன்னி தேர்தலை எதிர்கொண்ட ரணில் விக்ரமசிங்க, 22 ஆயிரத்து 45 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப்பெற்றது. ஜே.ஆர்.ஜயவர்தனவே தலைமைத்துவம் வழங்கினார்.

1978 இல் புதிய அரசியல் யாப்பு இயற்றப்பட்ட பின்னர், சர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலுமொரு தவணைக்கு நீடிக்கப்பட்டதால்  பொதுத்தேர்தல் 1989 இல்தான் நடைபெற்றது. இத்தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கினார். 86 ஆயிரத்து 477 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியே தேர்தலில் வெற்றிபெற்றது. கொழும்பு மாவட்டத்தையும் கைப்பற்றியது.

1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்ரமசிங்க, 2 லட்சத்து 91 ஆயிரத்து 194 வாக்குகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். எனினும், இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்விகண்டது. சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது. கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க. இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது.

இத்தேர்தலின் பின்னர் 1994 இல் கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.

2000 ஒக்டோபர் 10 ஆம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதம வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்ரமசிங்க 3 லட்சத்து 63 ஆயிரத்து 668 வாக்குகளைப்பெற்றார். இத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கவே வெற்றிநடைபோட்டது. 10 ஆசனங்களைக் கைப்பற்றியது.

எனினும், 11 மாதங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு,2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.  இத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றது. 4 லட்சத்து 15 ஆயிரத்து 686 வாக்குகளைப்பெற்று கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க முதலிடம் பிடித்தார். ஐ.தே.க.வே கொழும்பு மாவட்டத்தில் வெற்றிநடைபோட்டது.

2004 ஏப்ரல் 02 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, 3 லட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார். இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றிருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கவே வெற்றிக்கொடி நாட்டி, 9 ஆசனங்களைக் கைப்பற்றியது.

2010 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்ரமசிங்க, 2 லட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப்பெற்று ஐ.தே.க. பட்டியலில் முதலிடம் பிடித்தாலும் மாவட்டத்தில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விமல்வீரவன்ஸவே முதலிடம் பிடித்தார். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே 10 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலை வகித்தது.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தார். 5 லட்சத்து 566 விருப்பு வாக்குகளைப் பெற்றார். பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் இதுவாகும்.

இதற்கு முன்னர் 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் கம்பஹா மாவட்டத்தில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றிருந்தார்.கொழும்பு மாவட்டத்திலும் ஐ.தே.கவே கோலோச்சியது.

2020 பொதுத்தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

ஐ.தே.க. உருவாக்கமும் – தலைமைப்பதவியை வகித்தவர்கள் விபரமும்

1. டி.எஸ். சேனாநாயக்க
1946 செப்டம்பர் 6 ஆம் திகதியே ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. அதன் ஸ்தாபகத் தலைவராக டி.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரமடைய வேண்டும் என அரசியல் ரீதியில் தலைமைத்துவம் வழங்கியவர்களில் இவர் பிரதானமானவர்.

1947 ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 20 வரை 19 நாட்கள் நடைபெற்ற இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி 42 ஆசனங்களைக் கைப்பற்றி – ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் அரியணையேறியது. தமிழ்க்காங்கிரசும் அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக தேசப்பிதா டி.எஸ். சேனாநாயக்க பதவியேற்றார். புரட்சிகரமான திட்டங்களையும் முன்னெடுத்தார்.

டி.எஸ். சேனாநாயக்க 1952 மார்ச் 22 ஆம் திகதி அகால மரணமடைந்தார்.

2. டட்லி சேனாநாயக்க
தந்தையின் மறைவின் பின்னர், மகனான டட்லி சேனாநாயக்க 1952 மார்ச் 26 ஆம் திகதி இலங்கையின் 2 ஆவது பிரதம அமைச்சராக பதவியேற்றார். கட்சியின் தலைமைப் பதவியையும் பொறுப்பேற்றார். கட்சியை வெற்றிகரமாக வழிநடத்த தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

அதன் பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் – அதாவது 1952 ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.இதன்படி 1952 மே 24 ஆம் திகதி முதல் 30 வரை 4 நாட்கள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

95 ஆசனங்களுக்காக அரசியல் கட்சிகளிலிருந்தும் சுயேட்சைக்குழுக்களிலிருந்து 306 பேர் 89 தொகுதிகளில் போட்டியிட்டனர். தேர்தலில் 70.70 வீத வாக்குபதிவு இடம்பெற்றிருந்தது.

44.08 சதவீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக்கட்சி 54 ஆசனங்களையும், 15.52 சதவீத வாக்குகளுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 09 ஆசனங்களையும், லங்கா சமசமாஜக்கட்சி 9 ஆசனங்களையும், புரட்சிகர லங்கா சமசமாஜக்கட்சி, 4 ஆசனங்களையும், தமிழ் காங்கிரஸ் 4 ஆசனங்களையும், தமிழரசுக்கட்சி 2 ஆசனங்களையும், இலங்கை தொழிற்கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின.

சுயேச்சைக்குழுக்களில் போட்டியிட்ட 12 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். நியமன அடிப்படையில் 6 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

குடியுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டதால் இலங்கை, இந்திய காங்கிரஸ் தேர்தலில் களமிறங்கமுடியாமல்போனது. இறுதியில் டல்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிவாகைசூடியது.

எனினும், 1952 இல் இறுதிக்காலப்பகுதியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அரிசி விலை அதிகரிப்பானது அரசாங்கத்துக்கு பேரிடியாக அமைந்தது. மறுபுறத்தில் இடதுசாரிகட்சிகளும் போராட்டங்கள்மூலம் தலையிடிகொடுத்தன.

இதனால் 1953 ஒக்டோபர் மாதம் பிரதமர் பதவியை டட்லி சேனாநாயக்க இராஜினாமா செய்தார். தலைமைப்பதவியும் கைமாறியது.

3. சேர். ஜோன் கொத்தலாவல
டட்லி சேனாநாயக்க இராஜினமா செய்ததையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராக செயற்பட்ட சேர். ஜோன் கொத்தலாவல புதிய பிரதமராக பதவியேற்றார்.

1953 ஒக்டோபர் 12 முதல் 1956 ஏப்ரல் 12வரை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராகவும் இலங்கையின் 3ஆவது பிரதமராகவும் செயற்பட்டார்.

பிரதமராக புரட்சிகரமான சில திட்டங்களை முன்னெடுத்திருந்தாலும், அவரால் கட்சியை உரிய வகையில் கட்டியெழுப்ப முடியாமல் போனது.

ஆங்கில மொழிக்கு முன்னுரிமை, பிக்குகள் மதிக்கப்படாமை உட்பட மேலும் சில காரணங்களால் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம்மீது மக்கள் கடும் அதிருப்தியில் காணப்பட்டனர்.

மாற்று தேர்வாக - தேசியத்தை முன்னிலைப்படுத்திய சுதந்திரக்கட்சி மீது நம்பிக்கை வைத்தனர். பௌத்த தேரர்களும் ஓரணியில் திரண்டனர்.

இதனால் 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சேர். ஜோன் கொத்தலாவலவின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்தது.

4. டட்லி சேனாநாயக்க
1956 இல் நடைபெற்ற இலங்கையின் 3 ஆவது பொதுத்தேர்தலில் 51 ஆசனங்களைக் கைப்பற்றி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரியணையேறியது.

ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 14 ஆசனங்களைக் கைப்பற்றிய லங்கா சமசமாஜக்கட்சி மீண்டும் பிரதான எதிர்க்கட்சியானது.

இதனால் ஐ.தே.கவின் தலைமைப்பொறுப்பு 1956 இல் மீண்டும் டட்லி சேனாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார். 1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையில் 4 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 50 ஆசனங்களை வென்று ஆட்சியமைத்தது.

எனினும், நாடாளுமன்ற சிம்மாசன உரையின் முடிவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐ.தே.கவுக்கு தோல்வி ஏற்பட்டது.இதனால் தேர்தல் நடைபெற்று 24 நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி 1960 ஜூலை 20 ஆம் திகதி இலங்கையில் ஐந்தாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றதால் 1960 ஒகஸ்ட் 05 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவராக டட்லி சேனாநாயக்க கடமையேற்றார். 1964 டிசம்பர் 17 ஆம்திகதிவரை அப்பதவியில் நீடித்தார்.

1965 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துசெல்லும் வகையில் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கினார். 1973 ஏப்ரல் 13 ஆம் திகதி காலமாகும்வரை கட்சி தலைவராக செயற்பட்டார்.

5. ஜே.ஆர். ஜயவர்தன
1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றது. 17 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சி எதிர்க்கட்சியானது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஜெ.ஆர். ஜயவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. 1973 இல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை ஜே.ஆர். ஜயவர்தன ஏற்ற பின்னரே அசுர வேகத்தில் கட்சி வளர்ச்சி கண்டது.

குறிப்பாக 1977 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் 144 ஆசனங்களைக் கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஐ.தே.க. மீண்டும் அரியணையேறியது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைபலம் இருந்ததால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உருவாக்கி, 1978 பெப்ரவரி 4 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இவரே. 1982 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் கட்சி தலைவராக வெற்றிநடைபோட்டார்.

அதன்பின்னர் 1982 டிசம்பர் 22 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்திய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடித்துக்கொண்டார்.

இலங்கை அரசியலில் இன்றளவிலும் பேசப்படுகின்ற ஓர் அரசியல் தலைவராக ஜே.ஆர். ஜயவர்தன விளங்குகிறார். 1973 முதல் 1989வரை ஐ.தே.க. தலைவர் பதவியை வகித்துள்ளார். 1996 நவம்பர் முதலாம் திகதி காலமானார்.

இவரின் தலைமைத்துவமே ஐ.தே.கவுக்கு பொற்காலம் என கருதப்படுகின்றது.

6. ரணசிங்க பிரேமதாஸ
1988 டிசம்பர் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ரணசிங்க பிரேமதாச, 1989 ஜனவரில் ஐ.தே.கவின் தலைமைப் பதவியையும் பொறுப்பேற்றார்.

1982 இல் சர்வஜன வாக்கெடுப்புமூலம் நாடாளுமன்ற ஆயுட்காலம் நீடிக்கப்பட்டதால் 89 இல்தான் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றிநடைபோட பிரேமதாச சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கினார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்கும் எண்ணத்துடனேயே இருந்தார். எனினும், 1993 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டார்.

7. டி.பி. விஜேதுங்க
பிரேமதாஸவின் மறைவின் பின்னர் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்ற டி.பி. விஜேதுங்க குறுகிய காலம் ஐ.தே.க. தலைமைப் பதவியையும் வகித்தார். 1994 நவம்பர் 12ஆம் திகதிவரை ஐ.தே.க. தலைவராக செயற்பட்டார்.

8. ரணில் விக்ரமசிங்க
1994 இல் கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.  அன்றிலிருந்து இன்றுவரை அவர் நீடிக்கின்றார்.

ஆர். சனத்


Add new comment

Or log in with...