விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஜெயிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும் (நிர்வாகம்), சிறைச்சாலைகள் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவரது சிறையிலிருந்து கையடக்க தொலைபேசியை வீசியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில், மெகசின் சிறையில் பணியாற்றும் குறித்த ஜெயிலருக்கு வவுனியா சிறைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மெகசின் சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் உள்ளிட்ட இருவர், ரிஷாட் பதியுதீன் எம்.பி. வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடத்தை நெருங்கிய வேளையில் அவர் யைடக்கத் தொலைபேசியொன்றை சிறைக்குள்ளிருந்து வெளியே வீசியதாக, நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்திருந்தார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்ட குறித்த கையடக்கத்தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டிருந்தார்.
Add new comment