“நாட்டின் முன் எத்தகையச் சவால்கள், தடைகள் இருந்தாலும், நாம் கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன…” - நிறைவு விழாவில் ஜனாதிபதி
நாட்டின் முன் எத்தகையச் சவால்கள், தடைகள் இருந்தாலும், நாம் கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவற்றில், புனித தந்த தாதுவுக்காக நடத்தப்படும் புனித கிரியைகளுக்கு முதலாவது இடம் வழங்கப்படும் மரபு, பழங்காலத்திலிருந்தே ஆட்சியாளர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்றும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா, இம்முறையும் மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில், கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (23) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்விலேயே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசத்தின் முக்கியமான கலாசார விழாவாகக் கருதப்படும் கண்டி எசல பெரஹரா, பண்டைய பாரம்பரியங்களைப் பேணி வெற்றிகரமாக நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையில், எசல பெரஹரா சந்தேஷப் பத்திரம், தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்களினால். ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பெரஹராவில் சென்ற யானைகளுக்குப் பதிலாக, பந்தா எனும் யானைக்கு, ஜனாதிபதியினால் பழங்கள் வழங்கப்பட்டன.
புனித தலதா பெரஹரா வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதை அறிவிக்கும் செய்தியை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை
(ஜனாதிபதி மாளிகை - கண்டி)
தியவடன நிலமே நிலங்க தேல அவர்களே,
நான்கு பிரதான தேவாலயங்கள் உட்பட ஏனைய தேவாலயங்களின் நிலமேமார்களே,
நகரபிதா அவர்களே,
ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான அரச அதிகாரிகளே,
அதிதிகளே,
ஸ்ரீ தலதா பெரஹராவை பண்டைய மரபுகள் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஏற்ப, இந்த ஆண்டும் நடத்தக் கிடைத்தமை அனைத்து பௌத்த மக்களுக்கும் மிகுந்த பக்திபூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த உன்னத நிகழ்வின் நிறைவைக் குறிக்கும் வகையில், இங்கு வருகைதந்துள்ள ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே மற்றும் நான்கு பிரதான தேவாலயங்கள் உட்பட ஏனைய தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேமார்களை, அனைத்து பௌத்த மக்களின் சார்பாக, நான் அன்புடன் வரவேற்கிறேன்.
தலதா புனித தந்தத்துக்காக நடத்தப்படும் இந்தா் புன்னிய நிகழ்வின் செல்வாக்கு, கௌரவம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்து, தற்போதைய சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க, பெரஹர நிகழ்வுக்கு தமது ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரர், அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர், மற்றும் அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மஹா சங்கத்தினர்களை நான் இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறேன்.
நாட்டின் முன் எத்தகைய சவால்கள் மற்றும் தடைகள் இருந்தாலும், நாம் விட்டுக்கொடுக்க முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் எம்மிடம் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அதில் முதலாவது இடம், புனித தந்தத்துக்காக நடத்தப்படும் அர்ப்பணிக்கப்பட்ட புனித கிரியைகளுக்குச் சொந்தமானது என்பதை, பழங்காலத்திலிருந்தே எமது ஆட்சியாளர்கள் நம்பினார்கள். அவர்கள் அந்தப் பாரம்பரியத்தை யுகம் யுகமாகப் பொறுப்பளித்தனர். பண்டைய மன்னர்கள் மற்றும் நாட்டின் அனைத்துத் தலைவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நானும் புனித தந்தத்துக்காகச் செய்ய வேண்டிய கௌரவங்களுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளேன்.
Add new comment