இந்தியாவில் இருந்து 40 தொன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றிய இலங்கை கடற்படை கப்பலான சக்தி (SLNS Shakthi) கொழும்பு துறைமுகத்தை நேற்று (22) நள்ளிரவு வந்தடைந்தது.
இலங்கை கடற்படை இதனை அறிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி இலங்கையின் திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்ற குறித்த கப்பல், ஓகஸ்ட் 18ஆம் திகதி இந்தியாவின் சென்னை துறைமுகத்தை அடைந்திருந்தது, அதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (20) குறித்த 40 தொன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றியவாறு அங்கிருந்து புறப்பட்டு நேற்று நள்ளிரவு அளவில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
நேற்றையதினம் (22) இந்திய கடற்படைக்குச் சொந்தமான 'சக்தி' எனும் கப்பல் 100 தொன் மருத்துவ ஒட்சிசனுடன் இலங்கையை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவ ஒட்சிசனை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால், இந்திய கடற்படை தளபதியிடம் நேரடியாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பல் 100 தொன் ஒட்சிசனை கொண்டு வந்ததாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
Add new comment