யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூபா 5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர், பொலிகண்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 கிலோ 330 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 126 கிலோ கிராம் கஞ்சாவை, கடல் வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்து, அங்கிருந்து வேறு பிரதேசத்திற்கு கெப் வண்டி மூலம் கடத்திச் செல்ல முற்பட்ட போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த வாகனத்தையம் கைப்பற்றியுள்ளனர்.
உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஐஸின் (பளிங்கு Methamphetamine) தெரு மதிப்பு ரு. 2 கோடி 50ஈலட்சம் ரூபாய் எனவும் கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி ரூ. 2 கோடியே 50 இலட்சம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படையினரின் வழமையான சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையின் போது இன்றையதினம் (14) சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பொலிகண்டி கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வாகனமொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொலித்தீன் பொதிகளை ஏற்றிக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைன்போது, பொலித்தீன் பொதிகள் 3இனுள் 60 பொதிகளாக பொதி செய்யப்பட்டிருந்த 126 கி.கி. கேரள கஞ்சா மற்றும் பிளாஸ்திக் பாத்திரமொன்றில் சூட்சுமமான முறையில் 3 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 2.33 கி.கி. ஐஸ் (Crystal Methamphetamine)போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த கெப் வாகனத்தை கைப்பற்றிய கடற்படையினர், அவற்றை கடத்த முற்பட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 38, 34, 28 வயதுடைய மாங்குளம், இரணைமடு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, குறித்த போதைப் பொருட்கள், கெப் வாகனத்துடன், சந்தேகநபர்களை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன், பருத்தித்துறை விசேட நிரூபர் - நிதர்ஷன் வினோத்)
Add new comment