- கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு SMS
கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, மேல் மாகாணத்தில் AstraZeneca தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு அதன் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை இன்று (01) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.
இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் அடிப்படையில், கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணி நேர தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் ஓகஸ்ட் 01 முதல் 06 வரை தடுப்பூசி வழங்கும் இடங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது (கீழே இணைக்கப்பட்டுள்ளது) குறித்த இடங்களில் AstraZeneca இரண்டாம் டோஸ் தடுப்பூசியை பெறுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆயினும் கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள AstraZeneca தடுப்பூசி பெற்ற நபர்களுக்கு அவர்கள் பதிவு செய்த கையடக்கத் தொலைபேசிக்கு SMS ஊடாக உரிய நாள் மற்றும் திகதி தொடர்பான அறிவிப்பு அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு தடுப்பூசி பெறுவதற்கு, தங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை மற்றும் ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டபோது வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக தனியான வரிசைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) அறிவித்துள்ளது.
COVAX (கொவிட் தடுப்பூசிகளை பரிமாறிக் கொள்ளும்) வசதியின் கீழ் ஜப்பான் அன்பளிப்பு செய்த AstraZeneca தடுப்பூசிகள் நேற்று வந்தடைந்ததோடு, முதல் டோஸாக அதனைப் பெற்றுக் கொண்டு இரண்டாம் டோஸிற்காக காத்திருக்கும் 490,000 பேருக்கு முன்னுரிமையளித்து அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் மேலுமொரு தொகுதியை ஜப்பான் அடுத்த வாரம் வழங்கவுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
>>மேல் மாகாணத்தில் ஓகஸ்ட் 01 - 06 வரை AstraZeneca தடுப்பூசி வழங்கும் இடங்கள்<<
Add new comment