AstraZeneca கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டவர்களுக்கு நாளை (01) முதல் அதன் இரண்டாவது டோஸ், கொழும்பு, விகாரமஹா தேவி பூங்காவில் வழங்கப்படவுள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நாளை மறுநாள் (02) தியத உயன மற்றும் விகாரமஹா தேவி பூங்காவில் அதன் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
AstraZeneca கொவிட் தடுப்பூசியின் 728,460 டோஸ்கள் இன்று ஜப்பானிலிருந்து கிடைக்கவுள்ளதோடு, எதிர்வரும் வாரத்திலும் அதன் மற்றுமொரு தொகுதி இலங்கை வரவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
COVAX (கொவிட் தடுப்பூசிகளை பரிமாறிக் கொள்ளும்) வசதியின் கீழ் இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ள AstraZeneca தடுப்பூசிகள் முதல் டோஸாக அதனைப் பெற்றுக் கொண்டு இரண்டாம் டோஸிற்காக காத்திருக்கும் 490,000 பேருக்கு முன்னுரிமையளித்து, வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
Add new comment